பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்துக்கு புறம்பானது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தற்போது வரை பல்கலைக் கழகங்களில் வேந்தரான தமிழக ஆளுநராக நியமிக்கப்படுபவர்களுக்கே இருந்து வருகிறது. அதன்படி பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை தேர்வு செய்யும் போது பல்கலைக்கழகங்களின் செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்களில் தலா ஒருவர் மற்றும் தமிழக ஆளுநர் சார்பில் ஒரு பிரதிநிதி என 3 பேர் நியமிக்கப்படுவர்.

இந்த தேர்வுக்குழு துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் கல்வித் தகுதி, அனுபவம் உள்ளிட்ட விவரங்களை ஆராய்ந்து துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் இருந்து 3 பேரை தேர்வு செய்து ஆளுநருக்கு பரிந்துரை செய்வார்கள். இவர்களிடம் நேர்முகத் தேர்வு நடத்தி ஒருவரை துணை வேந்தராக ஆளுநர் நியமித்து உத்தரவிடுவார்

இந்நிலையில் இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலும், தேவைப்பட்டால் துணை வேந்தரை நீக்கம் செய்யும் இறுதி முடிவை மாநில அரசே மேற்கொள்ளும் வகையிலும் 2 மசோதாக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.

இதுகுறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசை ஆளுநர் கலந்தாலோசிப்பதில்லை என்பதால் இந்த மசோதாக்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து துணை வேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் துணை வேந்தர் நியமன மசோதா குறித்து விளக்கம் அளிக்கக் கோரி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்புவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்துக்கு புறம்பானது. துணை வேந்தர்களை அரசே நியமித்தால் அது அரசியல் தலையீட்டுக்கு வழிவகுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம் உள்பட சுமார் 10 பல்கலைக் கழகங்களில் துணை வேந்தரை நியமிக்க மசோதா தாக்கலாகியிருந்தது. சட்டபேரவையில் தாக்கலாகி ஆளுநருக்கு அனுப்பிய மசோதா சுமார் 4 மாதங்களாக நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.