தமிழகத்தில் மின்சார வாரிய பராமரிப்பு பணிகளை நிர்வகிக்கும் பொறுப்பு தனியாரிடம் விட முடிவு செய்யப்பட்டு, இதன்மூலம் 12,000 பேரை தனியார் நிறுவனமே தேர்வு செய்வதற்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் ரயில்வே, வங்கி மற்றும் மத்திய அரசு நிறுவனங்களில் கடந்த சில ஆண்டுகளாக வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களுக்கே அதிக அளவில் வேலை கொடுக்கப்படுகிறது என்றும், இதனால் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதேபோன்று, தமிழக அரசு அலுவலகங்களில் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களின் பணியிடங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு, அந்த இடங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை பணி அமர்த்தும் நிலை உள்ளது.

இதனால் தமிழகத்தில் படித்த பல லட்சக்கணக்கான இளைஞர்கள், வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் சென்னை தலைமை செயலகத்தில் துப்புரவு பணியாளர் வேலைக்கு கூட இன்ஜினியர்கள், எம்பிஏ உள்ளிட்ட உயர்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கும் அவலநிலை ஏற்பட்டது.

தற்போது ரேஷன் கடைக்கு எடையாளர்கள் பணிக்கு ஆட்கள் தேர்வு நடக்கிறது. இந்த வேலைக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு படித்தாலே போதும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனாலும், அந்த பணியிடங்களுக்கு இன்ஜினியர் உள்ளிட்ட பட்டதாரிகளுமே விண்ணப்பித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தில், மின் பராமரிப்பு பணிக்கு நேரடியாக ஆள் எடுப்பதை நிறுத்திவிட்டு தனியார் மூலம் ஆட்களை நியமிக்க டெண்டர் வழங்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தமிழக மின்சார வாரியத்தில் பணியாற்ற 12,000 பேரை தனியார் நிறுவனமே தேர்வு செய்து கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் பிறப்பித்த உத்தரவில், “தமிழ்நாடு மின் பகிர்மான வட்டத்தின் பிரிவு அலுவலகத்தின் மூலம் மின்நுகர்வோருக்கு தடையற்ற மின் விநியோகம் வழங்குதல், தினசரி பராமரிப்பு பணிகள் உள்ளிட்டவற்றை ஒப்பந்த ஊழியர்கள் மூலமாக மேற்கொள்வது தொடர்பான ஒப்பந்த புள்ளிகளை தேர்வு செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.

இதற்கான ஒப்பந்தமானது ஒரே தவணைத் தொகை செலுத்துவதன் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும். விதி மற்றும் நிபந்தனைக்கு உடன்பட்டால் மேலும் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்படலாம். இந்த ஒப்பந்தப்புள்ளியை சம்பந்தப்பட்ட கண்காணிப்பு பொறியாளர் உறுதி செய்வார்.

இதற்கான தொகை, பிஎப், இஎஸ்ஐ உள்ளிட்ட ஊழியர் நலன் சார்ந்த விஷயங்களோடு ரூ.1,80,88,000 என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தேர்வாகும் ஒப்பந்ததாரர் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் வகையில் குறைந்தது 20 ஊழியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.412 எனும் வகையில், மாதம் ரூ.12,360 ஊதியமாக வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதனால் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுபவர்கள் 3 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். அரசின் தனியார்மய நடவடிக்கையால் இனி ஐடிஐ படித்தவர்கள் நேரடியாக மின்வாரியத்தின் வயர்மேன் பணியிடத்தில் சேர முடியாது என்ற நிலை உருவாகி உள்ளது.

இப்படி, ஒரு தனியார் நிறுவனம் அல்லது ஏஜென்சி 12,000 பேரை தேர்வு செய்ய அனுமதி அளித்தால், அவர்கள் எப்படி தமிழக இளைஞர்களுக்கு வழங்குவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்ற கேள்வியை மின்சார ஊழியர் சங்க பிரதிநிதிகள் எழுப்பி உள்ளனர்.

ஏற்கனவே உதய் மின் திட்டத்தில் தமிழகமும் இணைந்ததால், மின்வாரிய பொறியாளர்களாக வெளி மாநிலத்தவர்கள் பலர் நியமிக்கப்பட்டனர். இப்போது, ஹெல்பர், வயர்மேன் போன்ற சாதாரண பணிகளிலும், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை உருவாகி உள்ளது.

இதுவரை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தேவையான ஊழியர்கள் தேர்வு நடத்தப்பட்டு அதன்மூலம் ஆட்களை தேர்வு செய்து வந்தார்கள். அப்படி ஆட்களை நியமிக்கும்போது, இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வந்தது.

இனி தனியாரே ஊழியர்களை நியமித்துக் கொள்ளலாம் என்றால் இடஒதுக்கீடு முறை முற்றிலும் கைவிடப்பட்டு விடும். இதனால் சமூகத்தில் பின்தங்கியவர்கள் எப்படி அரசு வேலைக்கு வர முடியும் என்பன போன்ற பல்வேறு பிரச்னைகள் உள்ளது. அதனால் தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று மின்சார வாரிய தொழிற்சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி அபார வெற்றி