லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில், பாஜக ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்து செய்து, ஆஷிஷ் மிஸ்ரா ஒரு வாரத்திற்குள் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது பாஜக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சென்ற கார் ஏற்றிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

மேலும் விவசாயிகள் மீது கார் ஏறி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தை வீடியோ எடுத்த பத்திரிகையாளர் ஒருவரும் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

அதன் பின்னர் ஆஷிஷ் மிஸ்ரா மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஷ்ரா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக உத்தரப் பிரதேச சிறப்பு புலனாய்வுக் குழு 5,000 பக்க குற்றப்பத்திரிகையை தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வன்முறை நடந்தபோது சம்பவ இடத்தில் இருந்ததாகவும், பாஜக அமைச்சரின் கார் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் திட்டமிட்ட சதி என்றும் கூறியுள்ளனர்.

ஆனால் இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம் வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் பாஜக ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி ஜாமீன் வழங்கியது.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், லக்கிம்பூர் கேரி வழக்கின் சாட்சிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக விவசாயிகளின் குடும்ப உறுப்பினர்கள் கூறியிருந்தனர்.

இந்த மனுவை தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த மனு மீதான வாதங்கள் கடந்த 4 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (18.4.2022) தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான விசாரணை மறுக்கப்பட்டுள்ளதென தாங்கள் கருதுவதாகக் குறிப்பிட்டு, ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்து செய்துள்ளனர்

மேலும் ஆஷிஷ் மிஸ்ரா ஒரு வாரத்திற்குள் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். முதல் தகவல் அறிக்கையை மட்டும் வழக்கின் மொத்த அறிக்கையாகப் பார்க்கக் கூடாதென குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் நீதித்துறை நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.