கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்காக கரூர் மாவட்டத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் உபகரணங்கள் வாங்க தனது தொகுதி நிதியிலிருந்து ஒரு கோடியே மூன்று லட்சத்தை ஒதுக்க மாவட்ட ஆட்சியருக்கு, தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி பரிந்துரை செய்தார்.
 
ஆனால் அதை ஏற்க மறுத்து ரத்து செய்து கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
 
அதை எதிர்த்து செந்தில்பாலாஜி தொடர்ந்த வழக்கில், கரூர் மாவட்ட ஆட்சியர் செயலை கண்டித்த நீதிமன்றம் ‘செந்தில்பாலாஜியின் தொகுதி நிதியைப் பயன்படுத்தாதது ஏன்?’ என அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தது.
 
இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, செந்தில்பாலாஜியின் நிதியை அரவக்குறிச்சி தொகுதிக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் மற்ற தொகுதிக்கு பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
 
அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், சட்டமன்ற உறுப்பினர்களின் நிதியை முதலமைச்சர் பயன்படுத்துவதாகத் தெரிவித்தார்.
 
வழக்கை விசாரித்த நீதிபதிகள் எதிர்க்கட்சி உறுப்பினர் என்பதனால் நிதி பயன்படுத்தப்பட வில்லையா என்று கண்டனம் தெரிவித்தனர்.
 
மேலும், கொரோனா சூழலில், செந்தில்பாலாஜியின் சட்டமன்ற உறுப்பினர் நிதியை பயன்படுத்த வேண்டும் என்றும் பயன்படுத்தாமல் அதை நிராகரித்து மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டுள்ளனர்.