அதிமுக எடப்பாடி பழனிசாமி மீது ஏற்கனவே நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார்கள் உள்ள நிலையில், புதிதாக ரூ.692 கோடி நெடுஞ்சாலை துறை ஊழல் புகார் ஒன்றை அறப்போர் இயக்கம் அளித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது, தனது பொறுப்பில் இருந்த பொறுப்பில் இருந்த நெடுஞ்சாலை துறையில் பல டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக பல்வேறு நெடுஞ்சாலை துறை டெண்டர்களை தனது உறவினர்களுக்கு கொடுத்து ஊழல் செய்தார் என்று புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு நெடுஞ்சாலைகளை மேம்படுத்த வழங்கப்பட்ட டெண்டர்களில் முறைகேடு நடந்து அரசுக்கு ரூ.692 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆவணங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறையில் அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது.

இந்த புகாரில், நெடுஞ்சாலைத் துறையை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனித்தபோது தஞ்சை கோட்டத்தில் சாலைகளை மேம்படுத்த 2020 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 3 டெண்டர்களில் முறைகேடு நடந்துள்ளது.

சாலைகளை மேம்படுத்துவதற்காக வழக்கமான தொகையைவிட அதிக தொகைக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.692 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விதிமுறைகளை மீறி ஆர்.ஆர்., எஸ்.பி.கே., கே.சி.பி. போன்ற நிறுவனங்களுக்கு டெண்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த 3 நிறுவன அதிபர்களின் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனையில் கணக்கில் வராத ரூ.500 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வருமானம் நெடுஞ்சாலை பணிகளின் மூலம் வந்திருக்கலாம் எனச் சந்தேகம் உள்ளது. எனவே இந்த சோதனையில் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும்.

மேலும் சோதனைக்கு ஆளான எஸ்.பி.கே. அதிபர் நாகராஜன் செய்யாதுரை, பழனிசாமி சம்பந்தியின் தொழில் கூட்டாளி. எனவே எஸ்.பி.கே. கட்டுமான நிறுவன அதிபர்களுடன் பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

டெண்டர் முறைகேட்டில் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர்கள் பழனி, கண்ணன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது. எனவே முறைகேட்டில் தொடர்புடைய அனைவர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

முன்னதாக அதிமுக எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4,800 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.