தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அமைதியாக இருக்கிறது. மாணவியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று பாஜக நியமித்துள்ள உண்மை கண்டறியும் குழு கூறியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி லாவண்யா (17 வயது) தற்கொலைக்கு முயன்று, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 19 ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்த விவகாரத்தில், பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதால் தான் மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டதாகவும், அதனால் தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று பாஜக மற்றும் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரத்தில் உண்மையை கண்டறிய தேசிய பாஜக சார்பில் 4 பேர் கொண்ட குழுவை அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா அமைத்தார். அக்குழுவில் மத்திய பிரதேச எம்.பி சந்தியா ராய், நடிகையும் தெலங்கானா முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி, கர்நாடகத்தின் கீதா, மகாராஷ்ட்ராவின் சித்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இதனையடுத்து சென்னை வந்த பாஜகவின் 4 பேர் குழு, தங்களுடைய விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தில் உள்ள மாணவியின் வீட்டிற்கு சென்ற குழு, அங்கு மாணவியின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர்களிடம் சுமார் 1 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பாஐக மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன், மாவட்டத் தலைவர் அய்யப்பன் உட்பட பலரும் உடனிருந்தனர்.

விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்.பி. விஜயசாந்தி, “மாணவியை மதம் மாற தொடர்ந்து வற்புறுத்தியததால் தான் மாணவி தற்கொலை செய்துள்ளார். மாணவி தங்கிய விடுதி காலாவதியாகி 2 மாதங்கள் ஆகிவிட்டன.

பெயர்பெற்ற பள்ளி என சொல்லப்படும் நிலையில், விடுதிக்கான உரிமத்தை புதுப்பிக்க தவறியுள்ளனர். மாணவியை கொடுமைப்படுத்தியுள்ளனர். பாஜகவின் போராட்டத்தால் தான் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.மதம் மாற்ற முயற்சிப்பது குறித்து கான்வென்டில் படிக்கக்கூடிய மாணவர்களின் பெற்றோர்கள் யோசிக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் தமிழ்நாடு முதல்வர் அமைதியாக இருப்பதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. இந்த விஷயத்தில் முதல்வர் யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறார். பதில் சொல்ல வேண்டிய இடத்தில் முதல்வர் உள்ளார். இந்தச் சம்பவத்தை ஆளும் திமுக அரசு திசைமாற்ற முயற்சிக்கிறது.

மதத்தை வைத்து வாக்கு வாங்க வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மாணவி தற்கொலை விவகாரத்தில் காவல்துறை அராஜகம் செய்வதாகவும், இப்படிதான் சொல்ல வேண்டும் என காவல்துறையினர் கட்டாயப்படுத்துவதாகவும் பெற்றோர் கூறியுள்ளனர்.

கட்டாயபடுத்தி மதம் மாற்றம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை. இறந்த மாணவியின் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மாணவி தற்கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதுவரை இப்பிரச்சினையை பாஜக விடாது” என்று விஜயசாந்தி கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று (31.1.2022) தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை தொடர்பான வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.