தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,082-ஆக உயர்ந்துள்ளதாக என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,38,845-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று புதிதாக 805 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: கொரோனா பாதித்தவர்களிடம் இருந்து நோய் பரவாது- சிங்கப்பூர் அதிரடி ஆய்வு முடிவு

இதுதொடர்பாக கூறியதாவது; தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 8,731 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 7,839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் 17 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பலி எண்ணிக்கை 118-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 549 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 11,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 68 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 4,21,480 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 93 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.69% ஆக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.