தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர்சூட்டிய ஜூலை 18 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையில், இந்தியா 14 மாநிலங்களாகவும் 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது.

அதன்படி சென்னை மாகாணத்திலிருந்து மொழிவாரி மாநிலங்களாக ஆந்திரா, கர்நாடகா, கேளரா, ஒடிசா ஆகியவற்றின் பகுதிகள் பிரிக்கப்பட்டபிறகு, மதராஸ் மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்ட வேண்டும் என திமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றத்தை வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் 1956 ஆம் ஆண்டு சாகும் வரை உண்ணாவிரதமிருந்தார். அண்ணா, மா.பொ.சி, ஜீவா, கக்கன் போன்றவர்கள் சங்கரலிங்கனாரை சந்தித்து உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர் தம் உண்ணாவிரதத்தில் உறுதியாக இருந்தார். 76 நாட்கள் கடந்த நிலையில் 1956 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி உயிர் துறந்தார்.

1967 ஆம் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைந்தபிறகு, 1968 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன.

2019 முதல் நவம்பர் 1 ஆம் நாளை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலதரப்பிலும் நவம்பர் 1 ஆம் நாள் எல்லை போராட்டத்தினை நினைவு கூறும் நாளாகத் தான் அமையுமே தவிர தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும்,

மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி பேரறிஞர் அண்ணா அவர்களால் 1968 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட அந்த நாள்தான் தமிழ்நாடு நாள் என கொண்டாடப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை கவனமாக பரிசீலித்து தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 ஆம் நாளினையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

மேலும் தமிழ்நாட்டின் எல்லைகளைக் காக்க போராடி சிறை சென்ற தியாகிகளை தமிழ்நாடு அரசு போற்றி கவுரவித்து வருகிறது. தற்போது எல்லைக் காவலர்கள் 110 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் 5500 ரூபாய் உதவித் தொகையும், மருத்துவப்படியாக 500 ரூபாயும் வழங்கப்படுகிறது.

எல்லைக் காவலர்கள் மரபுரிமையாளர்களுக்கு 137 பேருக்கு உதவித்தொகையாக 3000 ரூபாய் மருத்துவப்படியாக 500 ரூபாய் அளிக்கப்படுகிறது. எல்லைப்போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டு சிறை சென்றவர்களுக்கு நவம்பர் 1 ஆம் தேதியன்று தலா 1லட்சம் ரூபாய் பொற்கிழி அளித்து கௌரவிக்கப்படுவார்கள்” என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

https://www.facebook.com/savenra/posts/7269855469706980