11 நாட்களுக்குப் பிறகு கொரோனா பாதித்த நோயாளிகளிடம் இருந்து மற்றொருவருக்கு நோய் பரவாது என சிங்கப்பூரின் தேசிய தொற்றுநோய் தடுப்பு மையம் மற்றும் மருத்துவக் கல்வி மையம் இணைந்து நடத்திய புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா, இன்று உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 55 லட்சம் பேரை பாதித்துள்ளது. 3.46 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் உலகின் பல நாடுகளும் கொரோனா வைரஸின் தன்மை, நோய் அறிகுறிகள், தடுப்பு மருந்துகள், நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் என தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றன. தடுப்பு மருந்துகள் இதுவரை பரிசோதனை அளவில் தான் உள்ளன.

இந்நிலையில் சிங்கப்பூரில் 73 நோயாளிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம், கொரோனா பாதித்த நோயாளிகளிடம் இருந்து 11 நாட்களுக்குப் பிறகு அவர்களிடம் இருந்து புதிதாக யாருக்கும் நோய் தொற்று பரவவில்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும், கொரோனா பாதித்தவர்களை 11 நாள்களுக்குப் பிறகு தனிமைப்படுத்துவது தேவையற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் மூலம், கொரோனா பாதித்த நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து விடுவிப்பது தொடர்பான சிங்கப்பூர் அரசின் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், இதுவரை, கொரோனா பாதித்தவர்களுக்கு, தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தனர். இனி, அது 11 நாட்களுக்குப் பிறகு என்று மாற்றப்படலாம் என்றும் தெரிய வந்துள்ளது.

சிங்கப்பூரில் தற்போது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 31960 ஆக உள்ளது. இவர்களில் 15738 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: உ.பி. தொழிலாளர்களை பிற மாநிலங்கள் வேலைக்கு அமர்த்த அதிரடி நிபந்தனை விதித்த யோகி ஆதித்யநாத்