பள்ளி மாணவர்களின் புத்தகப் பைகள் உள்ளிட்ட பொருட்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை அச்சிட்டு, அரசு நிதியை வீணாக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘நமது திராவிட இயக்கம்’ என்ற அமைப்பின் தலைவர் ஓவியம் ராஜன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “தற்போது இருப்பில் உள்ள பாடப் புத்தகங்கள், நோட்டுகள், பைகள் உள்ளிட்டவற்றில் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் இருப்பதனால் அவற்றை விநியோகிக்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்களுடைய வரிப் பணம் வீணாகக் கூடாது. எனவே ஏற்கனவே அச்சிடப்பட்ட பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுகள், பைகள் மற்றும் எழுது பொருட்களில் உள்ள முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து மாணவ, மாணவிகளுக்கு வினியோகிக்க உத்தரவிட வேண்டும்.

மேலும் எதிர்காலத்தில் நோட்டுகள், பைகளில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை அச்சிடத் தடை விதிக்க வேண்டும்” என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் இன்று (செப்டம்பர் 07) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம், முன்னாள் முதல்வர் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட 64 லட்சம் புத்தகப் பைகள், 10 லட்சம் எழுதுபொருட்கள் வீணாக்கப்பட மாட்டாது எனவும்,

அச்சடிக்கப்பட்டுள்ள அதே நிலையில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு அந்த புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பள்ளிப் புத்தகப் பைகளில் படத்தை அச்சிடுவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், தமிழக முதலமைச்சருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் புத்தகங்கள், நோட்டுகள், எழுது பொருட்கள் அடங்கிய பைகளில் முதலமைச்சர், அமைச்சர் ஆகியோரது படங்கள் அச்சடிப்பது மக்களின் வரி பணத்தை வீணடிப்பதாகும்.

அரசியல் வாதிகள் தங்களின் தனிப்பட்ட விருப்பத்திற்காக இது போன்று மக்கள் பணத்தை செலவு செய்யக்கூடாது. எதிர்காலத்தில் இதை அரசு உறுதி செய்ய வேண்டும். பொது நிதி இதுபோன்ற விளம்பரங்களுக்காக பயன்படுத்தக் கூடாது. இதை தற்போதைய அரசு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டனர்.

தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்- இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு!