பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில் கள்ளச் சாராயம் அருந்தி இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சுமார் 50 பேர் பொடாட், பாவ்நகர், அகமதாபாத் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் பீகார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் அங்கு சட்டவிரோத மது விற்பனை, கள்ளச் சாராய விற்பனை நடைபெறுகிறது. குஜராத்தில் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்வதாகவும், உணவு போன்று வீட்டுக்கு டோர் டெலிவரியாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகவும் அடிக்கடி புகார்கள் தொடர்ந்து எழுகின்றன.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதனால் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி 21 பேர் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் பலி எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது. மேலும், சுமார் 50 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது கள்ளச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக குஜராத் மாநில அரசு, உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தடயவியல் பகுப்பாய்வில் பாதிக்கப்பட்டவர்கள் மித்தைல் ஆல்கஹால் உட்கொண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க இந்திய காவல்துறை மூத்த அதிகாரி சுபாஷ் திரிவேதி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை குஜராத் உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

இதற்கிடையே, காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பொடாட் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சிறு-குறு வணிகர்கள் சிலர் சட்டவிரோதமான மதுபானத்தை மித்தைல் ஆல்கஹால் அல்லது மெத்தனால் என்ற அதிக நச்சுத் தொழிற்சாலை கரைப்பான்களுடன் கலந்து கிராம மக்களுக்கு ஒரு பைக்கு ₹ 20க்கு விற்றதாக தெரியவந்துள்ளது.

ஜெயேஷ் என்கிற ராஜூ என்பவர், தான் மேலாளராக பணிபுரிந்த அகமதாபாத்தில் உள்ள ஒரு குடோனில் இருந்து 600 லிட்டர் மித்தல் ஆல்கஹாலை திருடி, அதை தனது பொடாட்டை சேர்ந்த உறவினர் சஞ்சய் என்பவருக்கு ஜூலை 25 ஆம் தேதி ₹40,000க்கு விற்றது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது ஒரு தொழில்துறை கரைப்பான் என்பதை அறிந்திருந்தும், சஞ்சய் இந்த ரசாயனத்தை போடாட்டின் பல்வேறு கிராமங்களில் உள்ள கொள்ளையர்களுக்கு விற்றுள்ளதும், அவர்கள் ரசாயனத்தில் தண்ணீரை கலந்து நாட்டு மதுபானமாக மக்களுக்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் குஜராத்தில் ஆளும் பாஜக அரசை எதிர்க் கட்சிகள் சாடியுள்ளார். கள்ளச் சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு காவல்துறையினர் மற்றும் பாஜக தலைவர்கள் ஆதரவு வழங்குகின்றனர். காவல்துறையினருக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது. இதனால் தான் கள்ளச் சாராய விற்பனை இன்னும் தொடர்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.