ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 8 வது முறையாக மேலும் 4 மாதம் அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் 2017ம் ஆண்டு செப்டம்பர் 25 ம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும் 3 மாதத்திற்குள் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணையை கடந்த 2017ஆம் முதல் தொடங்கியது. போயஸ் கார்டனில் இருந்த சசிகலா, சசிகலா உறவினர்கள், போயஸ்கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்கள் என 150க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது.

இதனிடையே ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மருத்துவ நிபுணர்கள் இன்றி இயங்குவதாகவும், மருத்துவ நிபுணர்கள் குழுவில் இருந்தால்தான், விசாரணை முறையாக இருக்கும் என்றும் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கவேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது. இதையடுத்து ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்து, தமிழக அரசிடம் விளக்கம் கேட்டும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த போது, ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் 7 முறையாக நீடிக்கப்பட்டு, பிப்ரவரி 24ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மேலும் 4 மாதம் கால நீட்டிப்பு செய்து ஜூன் 24ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஜூன் 24ம் தேதியுடன் (புதன்கிழமை) விசாரணை கால நீட்டிப்பு முடிவடைந்ததால், ஆறுமுகசாமி ஆணையம் சார்பாக தமிழக அரசுக்கு 8வது முறையாக காலநீட்டிப்பு கேட்டு கடிதம் எழுதியிருந்தது. கடிதம் வாயிலாக ஆறுமுகசாமி ஆணையம் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று, விசாரணைக்கு மேலும் 4 மாதமாக கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் வாசிக்க: சாத்தான்குளம் இரட்டைக் கொலை: தமிழகம் முழுவதும் ஜூன்.26 முழு கடையடைப்பு