மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒரு தெருவிளக்கின் விலை ரூ.21,666 என்று மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்தும் பணியை மோடி அரசு கொண்டுவந்தது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 12 நகரங்கள் இதற்குத் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்துவருகின்றன.

இதில் சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டம் மட்டும் தான் ஆரம்பகட்ட அளவை எட்டியுள்ளது. மேலும் பல இடங்களில் அதிமுக பிரமுகர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக டெண்டர்களை விடுவதாகவும் இதில் முறையாக பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதேபோல் தான், மதுரை மாநகரில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பில் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. அதில், பெரியார் பேருந்து நிலையம் சீரமைப்பு பணி, மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் சீரமைப்பு பணி,

வைகை ஆற்றுக்கரையில் பூங்கா, அடுக்குமாடி வாகன காப்பகம் உள்பட 13 பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பணியில் பிற மக்கள் பிரதிநிதிகளை அழைக்காமல் தனிச்சையாகவே ஆளும் அரசு செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சுமார் 1000 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் அதிமுக அரசும், அமைச்சர்களும் மக்களுக்கு பலன் தரக்கூடிய எந்த திட்டமிடுதலும் இல்லாமல் நடத்தும் ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், கடந்த 2020 டிசம்பர் 21 ஆம் தேதி மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெறும் தெருவிளக்கு மாற்றும் பணிகள் குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டத் தலைவர்கள் எஸ்.கார்த்திக், பாலகிருஷ்ணன் ஆகியோர் மதுரை மாநகராட்சிக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

71 நாட்களுக்குப் பிறகு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியையும், அதிமுக அரசின் ஊழலையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

அந்த பதிலில், மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மதிப்பீடு செலவு சுமார் 1000 கோடி. அதில் 30.25 கோடி ரூபாயை தெருவிளக்குகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 30,377 தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தெருவிளக்கு பொருத்தும் பணிக்கு மதுரையின் 78 வார்டுகளை எடுத்துக்கொண்டு இந்த விளக்குகளை பொருத்தியுள்ளோம் என தகவல் அளித்துள்ளனர்.

மதுரை மாநகராட்சியின் மொத்தம் 100 வார்டுகளில் 78 வார்டுகளில் மட்டும் பணி நடந்துள்ளது. பெரும்பான்மையான புதியதாக மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளுக்கு ஒரு தெரு விளக்கினை கூட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பொருத்தவில்லை.

இந்த தெருவிளக்குகளை வாங்குவதற்கு சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த சபரி எலக்ட்ரிக்கல்ஸ் என்னும் ஒரு டீலருக்கு டெண்டர் கொடுத்துள்ளனர். 30 கோடி ரூபாய்க்கு பொருட்கள் வாங்கும் போது ஏன் ஒரு மாநில அரசினால், உற்பத்தி செய்யப்படும் இடத்தில் பொருட்கள் வாங்கப்படுவதில்லை என தெரியவில்லை.

அதேபோல் ஒவ்வொரு விளக்கினுடைய விலை குறித்து கேட்டிருந்த கேள்விக்கு மதுரை மாநகராட்சி அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சியைக் கொடுக்கிறது. 20, 40, 60, 90, 120, 200 ஆகிய 6 வகையான வாட்ஸ்களில் தெருவிளக்குகளை வாங்கியிருக்கிறார்கள். ஆனால் 20 வாட்ஸ் விளக்கு ஒன்றுக்கு மட்டும் விலை குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் சொல்வது ஒரு விளக்கு பொருத்தும் வரையிலான மொத்த செலவு ரூ 2,304.50.

மாநகராட்சி சொல்லும் திறனுள்ள எல்இடி விளக்குகளை வாங்கி ஒரு விளக்கினை இரு வேலையாட்கள் ஒரு நாள் முழுவதும் பொருத்தினால் கூட இவ்வளவு தொகை வருமா என தெரியவில்லை. அதிலும் மொத்தம் கூறும் 30,000 விளக்குகளில் சுமார் 18,380 விளக்குகள் 20 வாட்ஸ் விளக்குகள் தான்.

மாநகராட்சி குறிப்பிட்டுள்ள அந்த தொகையின் அடிப்படையில் கணக்கிட்டாலும் கூட சுமார் 4.23 கோடி ரூபாய் தான் வருகிறது. இது மொத்த விளக்குகளில் ஐந்தில் மூன்று பங்கு விளக்குகளுக்கான தொகை. மீதம் உள்ள சுமார் 12,000 தெருவிளக்குகளுக்கு மாநகராட்சி கணக்கின்படி சுமார் 26 கோடியை செலவிட்டிருக்கிறது.

அதன்படி ஒரு விளக்கின் விலை சராசரி 21,666 ரூபாய். மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட மக்கள் வரிப்பணம் சுமார் 1000 கோடி. அதில் வெறும் 3% தான் 30 கோடி ரூபாய்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சியோ, மக்கள் பிரதிநிதிகளோ இல்லாத நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மீண்டும் மதிப்பீடு செய்யப்படுவது மிக மிக அவசியம். தமிழகத்தில் எங்கெல்லாம் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடக்கிறதோ அவையெல்லாம் ஆய்வு செய்யப்படுவதும் அவசியம் என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சூரப்பாவுக்கு எதிரான விசாரணை அறிக்கை; தமிழக அரசு முடிவெடுக்க உயர்நீதிமன்றம் தடை