அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது எந்த இறுதி முடிவும் எடுக்கக்கூடாது என தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா மீதான ரூ.280 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், விசாரணை ஆணையத்துக்கு தடை கோரியும், சூரப்பா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

விசாரணை ஆணையத்துக்கு தடை கோரி துணைவேந்தர் சூரப்பா தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி வைத்தியநாதன் முன் இன்று (பிப்ரவரி 27) விசாரணைக்கு வந்தது.

அப்போது சூரப்பா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2018 ஆம் ஆண்டு துணைவேந்தராக நியமிக்கப்பட்ட போதும், 2020 வரை சூரப்பாவுக்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை எனவும், அரியர் தேர்வு ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும்,

அண்ணா பல்கலைகழகத்தை சீர்மிகு உயர்கல்வி நிறுவனமாக மாற்ற முயற்சித்ததால், இடஒதுக்கீடு கொள்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற தவறான கருத்து காரணமாகவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

துணைவேந்தரை நியமிக்க அதிகாரம் கொண்ட ஆளுநருக்கு தான், நீக்கவும் அதிகாரம் உள்ளதாகவும், கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதாலும், அரசுக்கு அடிபணிய மறுத்ததாலும் உள்நோக்கத்துடன் விசாரண ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சூரப்பா தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

மேலும் வரும் ஏப்ரல் மாதம் சூரப்பாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அவருக்கு எதிரான விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மே மாதம் வரை நீட்டித்துள்ளதாகவும், பணிக்காலம் முடிந்த பின் எப்படி நீக்க முடியும் என கேள்வி எழுப்பிய சூரப்பா தரப்பு வழக்கறிஞர்,

1000 ஆவணங்கள், 100 சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளதாகவும், இது சூரப்பாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்பதால் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், மனுதாரர் கூறுவது போல் அரியர் தேர்வு ரத்துக்கு எதிர்ப்பு மற்றும் சீர்மிகு கல்வி நிறுவனமாக அறிவிக்க முயற்சித்ததற்காக அவர் மீது விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.

விசாரணையை சந்திக்க அவர் ஏன் அச்சம் கொள்ள வேண்டும் எனக் கேள்வி எழுப்பிய தலைமை வழக்கறிஞர், விசாரணை ஆணையம் அமைக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும், ஏற்கனவே முன்னாள் துணைவேந்தர்கள் ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் விசாரணை ஆணையம் அறிக்கை அளித்தாலும், அதன் மீது அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கப் போவதில்லை எனவும், இந்த விவகாரத்தில் ஆளுநர் தான் இறுதி முடிவெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட தலைமை வழக்கறிஞர், மனுவுக்கு பதிலளிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார்.

பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், துணைவேந்தருக்கு எதிராக விசாரணை ஆணையம் அமைத்தது குறித்து ஆளுநர் வேதனை தெரிவித்ததாகக் கூறினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வைத்தியநாதன், கல்வி நிறுவனத்தின் நற்பெயரை கருத்தில் கொண்டு, சுமூக தீர்வு காண அறிவுறுத்தி, விசாரணை அறிக்கை மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தார்.

மேலும், மார்ச் 15 ஆம் தேதிக்குள் சூரப்பாவின் மனு மீது பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

சூரப்பா மீதான ரூ.280 கோடி ஊழல் புகார்; தமிழக முதல்வருக்கு ஆளுனர் திடீர் கடிதம்