பாலியல் குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் உள்ள சென்னை பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பால பவன் (PSBB) என்ற தனியார் பள்ளியில் பணியாற்றிய வணிகவியல் ஆசிரியரான ராஜகோபாலன் வரதாச்சாரி, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆபாசமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது.

மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரில், போக்சோ உள்ளிட்ட சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கே.கே.நகர் அனைத்து மகளிர் காவல்துறையினரால் மே 24 ஆம் தேதி ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் ராஜகோபாலனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தைரியமாக புகார் அளியுங்கள் என காவல்துறை சார்பில் தொலைபேசி எண்ணையும் சென்னை காவல்துறையினர் வெளியிட்டனர். மேலும் பள்ளியின் முதல்வர், தாளாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜகோபாலனை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் திவால் உத்தரவிட்டுள்ளார். தற்போது ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள உத்தரவு சிறை துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் ராஜகோபாலன் மீது அடுத்தக்கட்டமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PSBB பள்ளி முன்னாள் மாணவர் கிஷோர் கே.சாமி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!