சமூக வலைதளங்களில் தலைவர்கள், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் பரப்பிய முன்னாள் PSBB பள்ளி மாணவர் கிஷோர் கே.சாமி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.

திமுக எதிர்ப்பாளராக தன்னை சமூக வலைதளப்பக்கங்களில் முன்னிறுத்திக் கொண்டவர் முன்னாள் PSBB பள்ளி மாணவரான கிஷோர் கே.சுவாமி. திமுக குறித்தும் மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும் கடுமையான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தவர் கிஷோர் கே.சுவாமி.

திமுகவை ஆதரிப்பவர்களையும் தொடர்ந்து இழிவாக பதிவிட்டு வந்தவர் கிஷோர் கே.சுவாமி. இந்நிலையில் திமுக குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் திமுக ஐடி விங்க் நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில், கிஷோர் கே.சாமி கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டதும், அவரால் சமூக வலைத்தளங்களில் பாதிப்புக்கு உள்ளான பலரும் வரிசையாக புகார்களை அளிக்கத் தொடங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பெண் பத்திரிக்கையாளர் பற்றி இழிபடுத்தி பேசிய வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கிஷோர் கே.சாமியை இரண்டாவது முறையாக கைது செய்தனர்.

பின்னர், நடிகை ரோகிணி உட்பட 3 பேர் தொலைக்காட்சி நபர் ஒருவருக்கு கிஷோர் மிரட்டல் விடுத்ததாக புகாரளித்தனர். அந்தப் புகாரின் பேரில் மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்ட கிஷோர் கே.சாமி செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தலைவர்கள், பத்திரிகை நிருபர்கள் பற்றி அவதூறாக பேசிய கிஷோர் கே.சாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் குண்டாஸ் சட்டம் போடப்பட்டுள்ளது.

இதேபோல தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கிஷோர் கே.சாமியால் பாதிக்கப்பட்ட பலரும் அந்தந்த காவல் நிலையங்களில் புகார் தெரிவித்து வருகின்றனர். புகார்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில்தான், கிஷோர் சாமி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பெண்கள் விவகாரத்தில் பாஜக தலைவர் மீது குவிந்த 134 புகார்கள்; கமலாலயத்தில் கட்டாயம் விசாகா கமிட்டி