நெருப்பு வளையம் என்று பிரபலமாக அறியப்படும் சூரிய கிரகணம் நாளை விண்ணில் நிகழ்கிறது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும்போது பூமியின் மேற்பரப்பில் நிழல் விழும். சூரியனை நிலவு ஒரு குறிப்பிட்ட மணித்துளிகள் முழுவதும் மறைக்கும். சூரிய கிரகணத்தின் போது நிலவின் தோற்ற அளவு சூரியனை விட கொஞ்சம் சிறியதாக இருக்கும் போது சூரியனின் மையப்பகுதி முழுதையும் அது மறைத்து சூரியனின் மேல் பகுதி நெருப்பு வளையம் போல் தோன்றும்.

இந்த ஆண்டில் நடைபெறும் முதல் சூரிய கிரகணம் நாளை (ஜூன்.21) பூமியின் வடக்கு அரைகோளத்தில் நீண்ட பகல் நாளாக தோன்றுகிறது. இந்தியாவில் ராஜஸ்தான், ஹரியானா, உத்தரகாண்ட் மாநிலங்களில் முழு சூரிய கிரகணம் தெரியும். இந்தியாவின் இதர பகுதிகளில் வசிப்பவர்கள் பகுதி கிரகணத்தைக் காணலாம். சென்னையில் 34% தெரியும்.

மேலும் வாசிக்க: வரும் ஜூன் 21-ம் தேதி உலகின் கடைசி நாளா… மீண்டும் மாயன் காலண்டர்

இதுகுறித்து கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் உள்ள வானியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் எபினேசர் மற்றும் குமரவேல் ஆகியோர் கூறியது, “ஜூன்-21 நடைபெற உள்ள சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம். இந்த சூரிய கிரகணம் தமிழகத்தில் நாளை காலை 10.22 மணிக்கு தொடங்கி மதியம் 1.41 மணிக்கு முடிவு பெறும். இதில் நண்பகல் 11.59 மணிக்கு முழுமையான நிலை ஏற்படும்.

இருப்பினும் தமிழகத்தில் 34 சதவீதம் மட்டுமே சூரிய கிரகண நிகழ்வை காண முடியும். கொடைக்கானல் பகுதியில் நடைபெறும் சூரிய கிரகணத்தை https://www.iiap.res.in/ என்ற இணையதளங்களில் பொதுமக்கள் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மேற்கண்ட இணையதளத்திற்கு சென்று சூரிய கிரகண நிகழ்வை பார்க்கலாம். சூரிய கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்க கூடாது. பார்த்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே பாதுகாப்பான கண்ணாடிகளை அணிந்தபடியே அதனை பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளனர். மேலும் அடுத்த சூரிய கிரகணம் 2020 டிசம்பர் 14ல் தோன்றும் குறிப்பிடத்தக்கது.