நீட் தேர்வால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது பாஜக மோடி அரசு. நீட் தேர்வால் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாக மாணவர்களும், பெற்றோர்களும், கல்வியாளர்களும் தெரிவித்தும் பின்வாங்க மறுக்கிறது ஒன்றிய பாஜக அரசு.

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும், நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கு ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு மாநிலம் ஆய்வு நடத்தி அறிக்கையைத் தாக்கல் செய்தது.

இதனிடையே, நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்த 165 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் நீட் தேர்வு தொடர்ந்து நடந்தால், சுகாதார கட்டமைப்பு, கல்வி பாதிக்கப்படும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவர்கள் இல்லாத நிலை உருவாகும். அதேபோல், அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இருக்கமாட்டார்கள். பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் நீட் தேர்வு மட்டுமல்ல எந்தவித பொது நுழைவு தேர்வும் நியாயமானதாக இருக்காது.

நீட் ரத்து சட்டம் இயற்றுவது மாணவர் சேர்க்கையில் மாணவ சமுதாயத்துக்கான சமூக நீதியை உறுதி செய்யும். மருத்துவ மாணவர் சேர்க்கையை பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்தவேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் நீட் தேர்வு கோச்சிங் சென்டர்களை பிரபலப்படுத்துகிறதே தவிர கற்றலை அல்ல. இதற்கு சுமார் 1 லட்சம் முதல் 4.5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுகிறது. குறிப்பாக முதல் முறை நீட் தேர்வு எழுதுபவர்களை விட, ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் தேர்வு எழுதுபவர்களுக்கு தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கிறது.

[su_image_carousel source=”media: 26633,26634,26635″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

எனவே நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக தமிழ்நாடு அரசு தொடங்கலாம். நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தனிச் சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், நீட் தேர்வால் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை புறக்கணித்தது, தனியார் பயிற்சியை அதிகம் ஊக்குவித்தது பழங்குடி, தமிழ்வழி, கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்புகளை மறுக்கிறது என்கிற நீட் தேர்வை எதிர்ப்பதற்கான பல்வேறு காரணங்கள் தரவுகளின் வாயிலாக அளிக்கப்பட்டுள்ளன.

நீட் தேர்விற்கு முன்பாக 2016-17 கல்வியாண்டில் மருத்துவ படிப்பு சேர்க்கையில் 537 ஆக இருந்த தமிழ்வழி படித்த மாணவர்களின் எண்ணிக்கை, நீட் தேர்வு வந்த பிறகு 2017-18 கல்வியாண்டில் 56 ஆக குறைந்துள்ளது.

2020-21 கல்வியாண்டில் 82 பேரும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5% இடஒதுக்கீட்டின் படி 217 பேரும் என மொத்தம் 299 மாணவர்களே தமிழ்வழியில் படித்தவர்கள். நீட் முன்பாக 500க்கும் மேற்பட்ட தமிழ் வழி மாணவர்கள் படித்து வந்த நிலையில் இடஒதுக்கீடு வழங்கியும் பாதியை மட்டுமே நெருங்க முடிந்து இருக்கிறது.

நீட் தேர்விற்கு முன்பாக 2016-17-ல் மருத்துவக் கல்லூரிகளில் மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் 65.66% ஆக இருந்த நிலையில், நீட் தேர்விற்கு பிறகு 2020-21ல் 43.13% ஆக குறைந்துள்ளது. அதேநேரத்தில், 0.39% ஆக இருந்த சிபிஎஸ்இ மாணவர்களின் எண்ணிக்கை 26.83% ஆக உயர்ந்துள்ளது.

நீட் தேர்வுக்கு பிறகு தமிழ் வழியில் படித்தவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவது குறைந்து உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மொத்த சதவீதத்தில், நீட் முன்பாக ஆங்கில வழி பயின்றவர்கள் 84.12% மற்றும் தமிழ் வழி பயின்றவர்கள் 14.88% ஆக இருந்த நிலையில், நீட் பிறகு 2020-21ல் ஆங்கில வழி பயின்றவர்கள் 98.01% ஆக அதிகரித்தும் மற்றும் தமிழ் வழி பயின்றவர்கள் 1.99% ஆக குறைந்தும் உள்ளது.

நீட் தேர்வுக்கு முன்பாக 2016-17ல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 65.17% ஆக இருந்த கிராமப்புற மாணவர்களின் சதவீதம், நீட் தேர்விற்கு பிறகு 49.91% ஆக குறைந்துள்ளது. அதேநேரம், 34.83% ஆக இருந்த நகர்ப்புற மாணவர்களின் சதவீதம் 50.09% ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு முதல் தலைமுறை பட்டதாரிகளின் மருத்துவ படிப்பு சேர்க்கை எண்ணிக்கை குறைந்துள்ளது. 2016-17-ல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 18.26% ஆக இருந்தது, 2020-21ல் 10.46% ஆக குறைந்துள்ளது.

பெற்றோரின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு முன் 2016-17ல் 47.42% இருந்து நீட் தேர்வுக்கு பிறகு 2020-21ல் 41.05% ஆக குறைந்து உள்ளது. இந்த சதவீதம் நீட் தேர்வுக்கு பிறகு 30% அளவிற்கும் குறைந்து சென்றதை பார்க்கலாம்.

நீட் தேர்விற்கு முன்பாக, அதே ஆண்டில் பள்ளி படிப்பை முடித்த 87.53% மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் நுழைந்தனர். மீண்டும் முயற்சித்தவர் 12.47% ஆகவே இருந்தனர். ஆனால் 2020-21 ஆம் ஆண்டில் 28.58% என தலைகீழாக மாறி உள்ளது.

நீட் தேர்வெழுதி மீண்டும் முயற்சிப்பவர்கள் 71.42% ஆக உள்ளனர். இது நீட் தேர்விற்கு பிறகு மீண்டும் மீண்டும் முயற்சிப்பவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் இடங்களை பெற முடிகிறது என்பதை காட்டுகிறது.

2017 முதல் நீட் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டில் இருந்து மாநில கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைப் பெறும் மாநில மருத்துவர்களின் சதவீதம் தொடர்ந்து சரிவை கண்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.