சீனாவுக்கு பலமுறை சென்று வந்தும் பயங்கரவாதத்தை ஏன் உங்களால் தடுக்க முடியவில்லை; ஆறு ஆண்டுகளில்‌ எந்த ஒரு கேள்விக்கும்‌, சரியான பதில்‌ அளிக்காமல்‌, உணர்ச்சிகரமாகப் பதிலளிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறீர்கள்‌ என்று பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார் கமல்ஹாசன்.

‘கல்வான் எல்லைப்பகுதி எங்களுக்குச் சொந்தமானது. அதில் இறையாண்மை இருக்கிறது’ என்று சீனா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், சீனாவின் பேச்சை ஏற்க முடியாது என்று மறுப்புத் தெரிவித்து வருகிறது இந்திய அரசு.

இந்நிலையில் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கட்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். இதனிடையே இந்தியா- சீனா எல்லைப் பிரச்சினைத் தொடர்பாக பிரதமர் ஆற்றிய உரையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

பிரதமர் மோடி உரையை விமர்சித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (ஜூன்.21) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்வான் பள்ளத்தாக்கில் நிலவும் பதட்டம் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. கால்வான் பள்ளத்தாக்கே இந்திய பகுதி இல்லை என சீனா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது.

இந்த நிலையில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் கூறியிருக்கும் கருத்துக்கள் ஜூன் 16-17 தேதிகளில், இராணுவ அதிகாரிகளும், வெளியுறவுத் துறை அமைச்சரின் அறிக்கைகளிலிருந்து முரண்பட்டிருக்கிறது.

பிரதமர் பேசி முடித்து 10 மணிநேரம் கழித்து பிரதமர் அலுவலகம் அது அப்படி சொல்லவில்லை என விளக்கவுரை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளும் இதைச் சுற்றி நடக்கும் அரசியலும் வீரர்களின் மன உறுதியை குலைத்துவிடும் என்று கவலை கொள்கிறது பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பு.

மேலும் வாசிக்க: இந்திய ராணுவ வீரர்களை ஆயுதமின்றி அனுப்பியது யார்.. இந்த நிலைமைக்கு யார் பொறுப்பு..

தெளிவான சிந்தனை தேவைப்படும் போதெல்லாம், உணர்வுகளைத் தூண்டி விட்டு தப்பிக்க முயல்வதை பிரதமரும், அவரது சகாக்களும் நிறுத்த வேண்டும். இது ஒருமுறை அல்ல, கடந்த ஆறு ஆண்டுகளில் எந்த ஒரு கேள்விக்கும், சரியான பதில் அளிக்காமல், உணர்ச்சிகரமாக பதிலளிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறீர்கள்.

ஒவ்வொரு முறையும் கேள்வி கேட்பவர்களை தேசத்திற்கே விரோதியைப் போல் ஒரு பிம்பத்தை கட்டமைத்திருக்கிறீர்கள். ஆனால் அது ஜனநாயகத்தின் அடிப்படை என்பதை என்றும் மறந்து விடாதீர்கள். எதிலும் மக்களின் நன்மைக்கான திட்டம் இல்லாமல், உணர்வுகளைத் தூண்டும் உங்கள் பேச்சு தான் இந்த சூழ்நிலையிலும் நடக்கிறது.

கேள்வி கேட்பவர்கள், வீரர்களின் மன உறுதியை குறைப்பதற்காக கேட்கவில்லை. என் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கேட்கிறேன். இந்த அரசு எல்லையில் நிலவும் பதட்டத்தை தணிக்க என்ன செய்ய போகிறது? வீரர்களை சந்தேகப்படாதீர்கள் என்ற பதில் எங்களுக்குத் தேவையில்லை. இந்திய ராணுவத்தின் வீரத்தையும், தீரத்தையும் நன்கு அறிந்தவர்கள் நாங்கள். ஆனால் அவர்கள் உயிரை வைத்து நீங்கள் அரசியல் விளையாடாமல் பாதுகாக்கவே இந்த கேள்விகளை கேட்கிறேன்.

1. இதுவரை இந்திய பிரதமர் எவரும் செல்லாத அளவிற்கு அதிகமுறை சீனாவுக்கு சென்று வந்தீர்களே. அப்படியிருந்தும் இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க உங்களால் ஏன் முடியவில்லை?

2. கடந்த ஆண்டு சீன அதிபரை இந்தியாவுக்கு வரவழைத்து, நட்புறவை வளர்க்க பேச்சுவார்த்தைகள் நடத்தினீர்களே, அது எதுவும் உதவவில்லையா?

3. நட்புறவை வளர்க்க எல்லா நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், உங்களது முயற்சி தோல்வி தானா?

பேச்சுவார்த்தைகள் மூலமாகவோ, நட்புறவு மூலமாக நீங்கள் செய்ய வேண்டியதைத்தான் இந்திய இராணுவத்தின் வீரர்கள் உயிரைத் தியாகம் செய்து செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உயிரைப் பாதுகாக்க நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்கிறேன். தேசத்தின் பாதுகாப்பை பாதிக்காத, அதே நேரத்தில் நடந்த உண்மை நிகழ்வுகளை, பதட்டம் மிகுந்த இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்வது மக்களிடையே தேவையற்ற வதந்திகள் பரவுவதை தடுக்கும், அரசு தயார் நிலையில் இருப்பதை எடுத்துரைக்கும். வரி செலுத்தும் குடிமகனாக இதைக் கேட்பதற்கு அனைவருக்குமே உரிமை உள்ளது.

இராணுவத்தை நம்புங்கள், அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் போன்ற பொறுப்பில் இருந்து நழுவும் பதிலளிப்புக்கள் இல்லாமல், ஒரு மிகப்பெரிய தேசத்தின் பிரதமராக, உங்கள் பொறுப்பை உணர்ந்து இந்த சூழ்நிலையை சமாளிக்க என்ன செய்ய போகிறீர்கள் என்று சொல்லுங்கள்” என கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

[embeddoc url=”https://splco.me/tam/wp-content/uploads/2020/06/kamal-hassan-statement.pdf”]

மேலும் வாசிக்க: பாஜக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் சுதந்திரம் மறுக்கப்படுகிறதா..?