அமீரக நாட்டில் நடத்தப்பட்ட ஐபிஎல் 2020 தொடரின் மூலம், பிசிசிஐ அமைப்பிற்கு ரூ.4000 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அந்த அமைப்பின் பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால் 2020 ஐபிஎல் தொடர் கடும் சிக்கல்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளுக்கும் இடையே ஐக்கிய அமீரகத்தில் நடந்து முடிந்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் நடைபெற்றன.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமல் வெளியிட்டுள்ள தகவலில், “ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி மூலம் இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ .4,000 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. மேலும் கடந்த தொடருடன் ஒப்பிடுகையில், இந்தமுறை கொரோனா காரணமாக 35% அளவிற்கு செலவினங்கள் குறைக்கப்பட்டன.

அதேபோல், தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட சுமார் 25% அதிகரித்து உள்ளது. 60 போட்டிகளில் 1800 தனி நபர்கள் உள்பட 30,000 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.

மேலும் தொடக்க ஆட்டமான மும்பை – சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியை, முன்னெப்போதும் இல்லாதததைவிட அதிகம் பேர் கண்டு ரசித்தனர்.

பல சவால்களுக்கு மத்தியில், ஐபிஎல் தொடரை நடத்தி, எங்களின் திறனை நிரூபித்துள்ளோம். இத்தொடர் நடத்தப்படாமல் போயிருந்தால், கிரிக்கெட் வீரர்கள் தங்களின் ஒரு ஆண்டு விளையாட்டு வாழ்வை இழந்திருப்பர்” என்று தெரிவித்துள்ளார்.

வெப் சீரிஸில் நடிகையாக அறிமுகமாகிறார் பிரபல டென்னிஸ் வீராங்கனை