டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 100 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக்கில் தடகளத்தில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தகுதிச் சுற்றில் 86.65 மீட்டர் தூரம் எறிந்து, இறுதிப் போட்டிக்கு முனனேறினார். இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா துவக்கம் முதலே சிறப்பான இலக்கை பதிவு செய்து முதலிடத்தில் இருந்தார். அடுத்தடுத்த சுற்றுகளிலும் அவரே முன்னிலை பெற்றார்.

ஜெர்மனி வீரர் வெபர், செக் குடியரசு வீரர்கள் வெஸ்லி, வத்லெஜ், பாகிஸ்தான் வீரர் நதீம் ஆகியோர் நீரஜை பின் தொடர்ந்தனர். ஆனால் அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. 6 சுற்றுகளின் முடிவில், நீரஜ் சோப்ரா முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். அவர் அதிகபட்ச தூரமாக 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அசத்தினார்.

இதன் மூலம் தடகளப் போட்டியில் ஒலிம்பிக் களத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று தந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா. 100 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்குப் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தனியார் நிறுவனங்களில் இருந்தும் பரிசு மழை கொட்டி வருகிறது. சொகுசு கார் முதல் கோடிக்கணக்கான ரொக்கப் பணம் வரை பரிசு மழையில் சோப்ரா நனைந்து வருகிறார்.

ஹரியாணா முதல்வர் எம்.எல்.கட்டார் விடுத்த அறிவிப்பில், “ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு, மாநிலத்தின் விளையாட்டுக் கொள்கையின்படி, ரூ.6 கோடி ரொக்கப் பரிசும், முதல்நிலைப் பணியும், ஒரு குடியிருப்பு மனை குறைந்த விலையிலும் வழங்கப்படும்” என அறிவித்தார்.

பஞ்சாப் முதல்வர் அமரிந்தர்சிங் விடுத்த அறிவிப்பில், “ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பஞ்சாப் அரசு சார்பில் ரூ.2 கோடி ரொக்கப்பரிசு வழங்கப்படும். இந்தியாவுக்கான பெருமைக்கான தருணம். சோப்ராவின் குடும்பத்தினர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்து அனைத்து பஞ்சாப் மக்களும் சோப்ராவால் பெருமை அடைகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) விடுத்த அறிவிப்பில், “ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும்” என அறிவித்தது.

ஐபிஎல் டி20 தொடரில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பரிசு அறிவித்துள்ளது. சிஎஸ்கே அணி விடுத்த அறிவிப்பில், “ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தேசத்துக்குப் பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவுக்கு சிஎஸ்கே அணி சார்பில் ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும். அவர் எறிந்த தொலைவைக் குறிப்பிட்டு 8758 என்ற எண்ணில் ஜெர்ஸி வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்திய விமான நிறுவனமான இன்டிகோ நிறுவனம் விடுத்த அறிவிப்பில், “ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா 2021, ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் 2022 ஆகஸ்ட் 7-ம் தேதிவரை இன்டிகோ நிறுவனத்தில் ஓராண்டுக்கு எவ்விதக் கட்டணமும் இன்றி பயணிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளது.

மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா விடுத்த அறிவிப்பில், “ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா இந்தியா வந்தபின் அவருக்குப் புதிய எக்ஸ்யுவி 700 வகை சொகுசு கார் பரிசாக வழங்கப்படும்” என அறிவித்துள்ளார்.

எலான் குழுமத்தின் தலைவர் ராகேஷ் கபூர் விடுத்த அறிவிப்பில், “நீரஜ் சோப்ராவுக்கு ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசு தங்கள் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் விடுத்த அறிவிப்பில், “100 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக்கில் தடகளத்தில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது வரலாற்று நாள். ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவைப் பெருமைப்படுத்தும் வகையில் ரூ.1 கோடி பரிசு வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் நீரஜ் சோப்ரா நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற உணர்வை இன்னும் நான் அனுபவித்து வருகிறேன். எனக்கு ஆதரவு அளித்த, ஆசிர்வதித்த, இந்த நிலைவரை அழைத்துவந்த, எட்டுவதற்கு உதவி செய்த இந்தியாவில் உள்ள அனைவருக்கும், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தருணம் எப்போதும் என் வாழ்வில் நிலைத்திருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா, இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப், தெற்காசிய விளையாட்டு, உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, முதல் முறையாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது. மேலும், மொத்த பதக்க எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து, புதிய வரலாறு படைத்துள்ளது இந்தியா.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்: பிரதமர் மோடி அறிவிப்பு