சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் மொத்தம் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று ஏற்படுமோ என்ற பயத்தில் உள்ள ஊழியர்கள் பணிக்கு வர மறுப்பதால் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை மாதவரத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். சென்னைக்கு நாள்தோறும் சுமார் 10 லட்சம் லிட்டர் பால் ஆவின் நிறுவனத்தால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதில் பெரும் பங்கை மாதவரம் ஆவின் பால் பண்ணை வகித்து வருகிறது.

இந்நிலையில் மாதவரம் ஆவின் பால் பண்ணையில் வேலை செய்யும் தொழிலாளர்களில் நேற்று 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆவின் பால் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு என்ற செய்தி ஆவின் வாடிக்கையாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இதனால் சென்னைக்கு ஆவின் பால் சப்ளை பாதுகாப்பான முறையில் சப்ளை செய்யப்படுமா, இதுவரை விநியோகம் செய்யப்பட்ட பால் பாக்கெட்கள் கொரோனாவை கொண்டு சேர்த்திருக்குமா என அச்சம் எழுந்துள்ளது.

மேலும் வாசிக்க: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை கிடு கிடு உயர்வு- வாகன ஓட்டிகள் அதிருப்தி

ஆவின் அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், “மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் பாதுகாப்பான முறையில் பால் விநியோகம் தொடர்ந்து நடைபெறும். பால் சேவையில் முடக்கம் ஏற்படாது. சென்னையில் பாதிப்பு ஏற்பட்டால் காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், சேலம் ஆவின் பால் பண்ணைகளிலிருந்து பால் வரவழைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும்” என்று கூறியுள்ளனர்.

எனினும் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் பணியிலிருந்தபோது தொற்று பரவியிருக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.