உத்தரப்பிரதேச மாநில பாஜக அமைச்சர் கொரோனாவால் பலியானதையடுத்து, முதல்வர் யோகி தனது அயோத்தி பயணத்தை ரத்து செய்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் முதல்வர் யோகி அமைச்சரவையில் தொழில்நுட்ப கல்வி அமைச்சராக உள்ளார் பாஜகவைச் சேர்ந்த கமல் ராணி. 62 வயதாகும் இவருக்கு கடந்த 18 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து கமல் ராணி லக்னோ நகரில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி கமல் ராணி சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 2) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் கமல் ராணியின் மறைவுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்யச் செல்ல இருந்த தனது அயோத்தி பயணத்தை ரத்து செய்துள்ளார்.

நாட்டில் மாநில அமைச்சர் ஒருவர் கொரோனாவால் பலியாகி இருக்கிறார். ஏற்கனவே கொரோனாவுக்கு எம்.எல்.ஏக்கள் சிலர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: தமிழக ஆளுநருக்கு கொரோனா தொற்று உறுதி; தனியார் மருத்துவமனையில் அனுமதி