இறை தரிசனம் மக்களுக்கு அச்சத்தை நீக்கி ஒரு வித நிம்மதியை அளிக்கும், எனவே தமிழகம் முழுவதும் ஆலயங்களை தரிசனத்துக்காக திறக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், படிப்படியாக ஊரடங்கை தளர்த்தி இயல்பு வாழ்க்கைக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் வழிவகை செய்துள்ளது மாநில அரசு. அதன்படி 34 வகையான கடைகளை திறக்க அனுமதியும் அளித்திருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை.

மக்கள் பொருளாதார தேக்கத்தில் இருந்து மீள்வதோடு மட்டுமல்லாமல் தேவையற்ற அச்சங்களில் இருந்தும் மீளவேண்டும், மன நிம்மதி பெற வேண்டும். ஊரடங்கு காலம் பலருக்கு மனச்சோர்வையும், ஒரு வித அச்சத்தையும் உருவாகியுள்ளது. ‘நெஞ்சுக்கு நிம்மதி இறைவன் சன்னதி ” என்று சொல்வது போல இறைவன் தரிசனமே மக்களுக்கு அச்சத்தைப் போக்கி ஒரு வித நிம்மதியை அளித்து விடும்.

மேலும் வாசிக்க: கங்கை நீர் கொரோனா வைரஸை கொல்கிறதா.?

இதற்கு தீர்வு காணும் வகையில் ஆலயங்களை விரைந்து திறப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலயங்களை திறப்பதன் மூலம் அங்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடக்கும் தினசரி வேள்விகள் தொற்றுக்கு மருந்தாக விளங்கக்கூடும்.

தரிசனம் செய்ய வருபவர்களை சமூக விலகலை கடைபிடித்து ஒருவர் பின் ஒருவராக கூட அனுப்பலாம். எனவே பக்தர்கள் நலன், ஆலயம் சார்ந்த ஊழியர்கள் நலன், ஆலயம் சார்ந்த வியாபாரிகளின் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆலயங்களை விரைந்து திறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பொதுமுடக்கம் காரணமாக கோயில்கள் மூடப்பட்டிருப்பதால் அர்ச்சகர்களுக்கு தமிழக அரசு மேலும் 1000 ருபாய் நிவாரண தொகையை இரண்டாவது முறையாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: ஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி கொன்ற கயவர்களுக்கு கடும் தண்டனை தேவை: ஸ்டாலின் காட்டம்