விழுப்புரம் அருகே முன் விரோதம் காரணமாக பத்தாம் வகுப்பு மாணவியை கை,கால்களை கட்டி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த ஜெயபால் மகள் ஜெயஸ்ரீ. இந்நிலையில், ஜெயபாலுடன் இருந்த முன்விரோதம் காரணமாக அதிமுக கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் மற்றும் முன்னாள் அதிமுக கவுன்சிலர் முருகன் சேர்ந்து பழிவாங்கும் உணர்ச்சியுடன் ஜெயஸ்ரீயின் வாயில் துணியை அடைத்து, கை, கால்களைக் கட்டிப்போட்டு உடலில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளனர். இச்சம்பவம் தமிழகத்தையே அதிரச் செய்துள்ளது.

இச்சம்பவதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டுமென பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இதே கோரிக்கையை வலியுறுத்தி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “விழுப்புரம் சிறுமதுரையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் கை – கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணி வைத்து அழுத்தி, மூச்சுத் திணறவைத்து, அதிமுகவின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் – முன்னாள் கவுன்சிலர் முருகன் இருவரும் பெட்ரோல் ஊற்றிக் கொன்றிருக்கிறார்கள்.

மேலும் வாசிக்க: சென்னை: ஒரே மருத்துவமனையில் 26 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா

5% தீக்காயத்துடன் போராடிய ஜெயஸ்ரீ, சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டார் என்ற செய்தி இதயமுள்ள எவரையும் துடிதுடிக்கவே செய்யும்.

கோவை வேளாண் கல்லூரி மாணவியர் சுற்றுலா சென்ற பேருந்தை தருமபுரியில் தீக்கிரையாக்கி, மாணவியர் மூவரையும் கருக்கி, கதறக் கதறக் கொன்றதற்குக் காரணமானவர்கள் அதிமுக.,வினர் சிலர். அதற்கு அடுத்த கொடிய சம்பவம் இது.

சிறுமியை இழந்து வாடும் ஜெயபால் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் அதேவேளையில், குற்றவாளிகளுக்கு சட்டரீதியாக வழங்கப்படும் தண்டனையே இனி ஜெயஸ்ரீகள் போன்ற சிறுமிகளையும் பெண்களையும் காப்பாற்றும்.

இந்தக் கொடூர கொலைக் குற்றத்தில் ஆளுங்கட்சியான அதிமுக.,வினர் சம்பந்தப்பட்டுள்ளதால், காவல்துறையினர் பெயரளவிற்கு செயல்படாமல், சட்டத்தின் முழு வலிமையையும் நியாயமாகவும் வேகமாகவும் பயன்படுத்த வேண்டும்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இதுபோன்ற கொடிய நிகழ்வுகள், மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்பதை உணர்ந்து காவல் துறையினர், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் சாய்ந்துவிடாமல், நடுநிலையோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஏற்கனவே, பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் சம்பந்தப்பட்ட பலர் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவியுள்ள நிலையில், விழுப்புரத்திலும் அந்த நிலைமை ஏற்படக்கூடாது என்பதையும், ஜெயஸ்ரீயின் கொடூர மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க திமுக துணை நிற்கும்” என ஸ்டாலின் கூறியுள்ளார்.