பிரதமர் மோடிக்கு 100 ரூபாய் மணி ஆர்டரில் அனுப்பி, பிரதமர் மோடி தனது தாடியை ஷேவ் செய்துகொண்டு, அவர் நாட்டின் வளர்ச்சியை வளர்க்க வேண்டிக் கொள்கிறேன் என மகாராஷ்டிரா டீ கடைக்காரர் கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக நாடு முழுவதும் பல்வேறு நிலைகளில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தொழில்கள் முடங்கி, வேலையின்மை வரலாறு காணாத அளவில் அதிகரித்தது.

கொரோனா தொற்றாலும், அதைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்காலும் கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கு தள்ளப்பட்டு கடும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக ஒன்றிய பாஜக அரசு கொரோனவை கட்டுப்படுத்தி மக்களை காப்பாற்ற தவறிவிட்டது என மக்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மேலும் வேலைவாய்ப்பு, மருத்துவ வசதிகள், பொருளாதாரம் என இந்தியாவின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் பிரதமர் மோடி, தனது தாடியை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதாக பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் பாரமதியைச் சேர்ந்த டீ கடைக்காரர் அனில் மோர் என்பவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு 100 ரூபாய் பணத்தை மணி ஆர்டரில் அனுப்பி, தாடியை ஷேவ் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் டீ கடைக்காரர் அனில் மோர், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவியும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 30 ஆயிரம் நிதியுதவியும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பிரதமருக்கு மணி ஆர்டர் அனுப்பியது குறித்துப் பேசியுள்ள அனில் மோர், “நமது பிரதமர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் தனது தாடியை ஷேவ் செய்வதற்காக எனது சேமிப்பில் இருந்து ரூ.100 அனுப்புகிறேன். அவர் மிக உயர்ந்த பதவியில் உள்ள தலைவர். நான் அவரை காயப்படுத்த விரும்பவில்லை.

ஆனால் கொரோனா தொற்றால் ஏழைகளின் பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அவரது கவனத்தை ஈர்ப்பதற்காக இதைச் செய்கிறேன். பிரதமர் மோடி தனது தாடியை நன்கு வளர்த்துக் கொண்டார்.

அவர் எதையாவது வளர்க்க வேண்டும் என்றால், அது இந்த நாட்டு மக்களுக்கான வேலைவாய்ப்பாக இருக்க வேண்டும். மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

நாட்டில் தற்போதுள்ள மருத்துவ வசதிகளை அதிகரிக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையால் அமல்படுத்தப்பட்ட இரண்டு பொதுமுடக்கங்களால் மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட துயரங்களிலிருந்து விடுபடுவதை பிரதமர் உறுதிப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்கள் குறித்து ஒன்றிய அமைச்சரின் பேச்சால் விவசாயிகள் வேதனை