கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் இன்று (ஆகஸ்ட் 28) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 10ந் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில், வசந்தகுமாரும், அவரது மனைவியில் அனுமதிக்கப்பட்டனர். அவரது மனைவி சிகிச்சை குணமடைந்த நிலையில், நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வசந்தகுமார், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாத நிலையில், அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் மிகவும் கவலைக்கிடமாக இருந்த எம்.பி வசந்தகுமார், மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியான முதல் எம்.பி வசந்தகுமார்.

தமிழகத்தின் பிரபல வீட்டு உபயோகப்பொருட்கள் நிறுவனமான வசந்த் அன் கோ உரிமையாளரான எச்.வசந்தகுமார் 2 முறை எம்எல்ஏவாகவும், தற்போது கன்னியாகுமரி எம்.பி.யாகவும் பதவி வகித்து வருகிறார். இவரது சகோதரர் குமரி அனந்தன். மூத்த காங்கிரஸ்வாதியும், இலக்கியவாதியாமாவார்.

வசந்தகுமார் மறைவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை இரங்கல் தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி, உள்பட அனைத்து கட்சித் தலைவர்களும், அரசியல்வாதிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் வாசிக்க: சட்டத்தை மதிக்காத மாஜி ஐபிஎஸ் அண்ணாமலை மீது பாய்ந்தது வழக்கு