குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஷாகீன்பாக்கில் நடந்த போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்திய கபில் குர்ஜாரை பாஜக தனது கட்சியில் இணைத்தது சர்ச்சையாகி உள்ளது.

மத்திய பாஜக அரசு கடந்தாண்டு நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக டெல்லி ஷாகீன்பாக் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அதேபோல் டெல்லியில் நடைபெற்ற ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் மற்றும் புறநகர் பகுதியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை மோடி அரசு காவல்துறை மற்றும் துணைராணுவம் கொண்டு கலைத்தது.

அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறையை ஏற்படுத்தும் நோக்கில், இந்துத்வா கும்பல் பல வகைகளில் முயற்சித்தது. அதில் ஷாகீன்பாக் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது கபில் பைஸ்லா என்ற கபில் குர்ஜார் என்பவர் போராட்டம் நடைபெற்ற இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களை அச்சுறுத்தும் விதமாக வானத்தை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டு மக்களை அச்சுறுத்தினார் கபில் குர்ஜார்.

அப்போது அங்கிருந்தவர்கள் கபில் குர்ஜாரை பிடித்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். போலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றபோது, குஜ்ஜார் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூச்சலிட்டார். பின்னர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த கபில் குர்ஜார் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காஜியாபாத்தில் உள்ளூர் பாஜக தலைவர்கள் முன்னிலையில், கபில் குர்ஜார் அதிகாரப்பூர்வமாக பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்திய கபில் குர்ஜார் பாஜகவில் இணைந்த செய்தி சர்ச்சையாகி, கடுமையான எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து, இரண்டு மணி நேரத்தில் கபில் குர்ஜாரின் உறுப்பினர் சேர்க்கையை ரத்து செய்துள்ளது பாஜக.

முன்னதாக வட மாநிலங்களில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களை பாஜக தனது கட்சியில் இணைத்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துவருவது குறிப்பிடத்தக்கது.

உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை- நடிகர் ரஜினி அதிரடி