மத்திய அரசுடன் 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மூன்று சட்டங்களும் திரும்பப் பெறும் வரை போராட்டம் நீடிக்கும் என்று விவசாயிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

மத்திய பாஜக அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகள் 35 நாட்களாக போராடி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாய சங்க பிரதிநிதிகளுடன் 5 கட்ட பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு நடத்தியும் எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையேயான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. மதியம் 2 மணி அளவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், விவசாயிகள் தரப்பில் 40 விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மத்திய அரசு சார்பில் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தக தொழில் இணை அமைச்சர் சோம்பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் பாஜக அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்கிற விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டங்களில் திருத்தங்கள் வேண்டுமானால் மேற்கொள்ளலாம் என்று மீண்டும் மத்திய அரசு கூறியுள்ளது.

குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக சட்டமியற்ற வேண்டும் என்கிற விவசாயிகளுடைய கோரிக்கை தொடர்பாக ஒரு குழு அமைக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், அதனை விவசாயிகள் தரப்பில் ஏற்கவில்லை.

[su_image_carousel source=”media: 20812,20811″ crop=”none” columns=”2″ captions=”yes” autoplay=”3″]

விவசாயிகள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் மீது இன்று எந்த முடிவும் எட்டப்படாமல் 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. விவசாயிகள் ஏற்கனவே 4 நிபந்தனைகளை விதித்து இருந்தனர். மேலும் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார சட்டத்தை முற்றிலும் நீக்க வேண்டும் என்ற மற்றொரு நிபந்தனையும் முன்வைத்து, இது சம்பந்தமாக புதிதாக ஒரு கடிதத்தையும் மத்திய அரசுக்கு அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மூன்று சட்டங்களும் திரும்பப் பெறும் வரை போராட்டம் நீடிக்கும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்பட்ட 4 விவகாரங்களில் 2ல் உடன்பாட்டு ஏற்பட்டுள்ளது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 4 ஆம் தேதி நடைபெறுகிறது.

3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என வேளாண் சங்கங்கள் கோருகின்றன. குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்பதை எழுத்துப்பூர்வமாக அளிக்க அரசு தயாராக உள்ளது. ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அந்தஸ்து கிடைக்க வேண்டும் என விவசாய சங்கங்கள் கருதுகின்றன. எனவே இது குறித்தும் மற்ற பிரச்னைகள் குறித்தும் ஜனவரி 4 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு ஆலோசனை நடத்தப்படும் என்றார்.

பீகாரில் விவசாயிகள் மீது காவல்துறை தடியடி.. பலர் படுகாயம்