ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் காவல்துறை பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 2 காவல்துறையினர் பலியான சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள செவான் என்ற இடத்தில் உள்ள காவல்துறை முகாம் அருகே காவல்துறை பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில், 2 காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், படுகாயமடைந்த 12 பேர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் ஒருவர் உதவி காவல் ஆய்வாளர் என்றும் மற்றவர் கான்ஸ்டபிள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆயுதப் பிரிவின் 9வது பட்டாலியனின் காவல்துறை பேருந்து மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். ஜெய்ஷ்-இ-முகமது (JeM) அமைப்பின் ஒரு பிரிவினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், காஷ்மீரில் காவல்துறை பேருந்து மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஸ்ரீநகர் அருகே காவல்துறை பேருந்து மீது பயங்கரவாத தாக்குதல் நடந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்த கொடூரமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.

வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பங்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த மற்ற வீரர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.