விபிஎஃப் கட்டணத்தை ரத்து செய்யாதவரை புதிய படங்கள் வெளியிடப்படாது என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. இந்நிலையில் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு நவம்பர் 10 ஆம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி தியேட்டர்களை திறக்க தமிழ்கஅரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால் கொரோனா தொற்று பொதுமுடக்கம் காரணமாக, திரைப்படத் தயாரிப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், விபிஎஃப் கட்டணம் ரத்து செய்ய வேண்டும் என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது.

ஆனால் ஏற்க மறுத்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் திருப்பூர் சுப்பிரமணியம், ஸ்ரீதர் ஆகியோர், ‘அரசு உத்தரவுப்படி நாளை தியேட்டர்கள் திறக்கப்படும். தியேட்டர் அதிபர்கள் புதிய படங்களை கொடுக்காவிட்டால் வெற்றி பெற்ற பழைய படங்களை திரையிடுவோம்’ என்றனர்.

விபிஎஃப் கட்டணம் தொடர்ந்பாக தியேட்டர் அதிபர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டவில்லை.

இந்நிலையில், இன்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விபிஎஃப் சம்பந்தமாக அனைத்து தரப்புகளின் நிலைப்பாட்டின் காரணமாக புது திரைப்படங்கள் வெளியிடுவதில் சிக்கல் நீடித்து வருவதாகவும், இதில் நல்ல தீர்வு கிடைக்கும் வரை புதுப்படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்” என அறிவித்துள்ளார்.

கமல் பிறந்தநாளில் வெளியான ‘விக்ரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்