பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு ராஜமௌலி இயக்கும் அடுத்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. வரலாற்றுக் கதைகளை பிரம்மாண்டமாக படைக்கும் ராஜமவுலி பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடிய அல்லுரி சீதாராம ராஜு, கொமரம் பாபு ஆகியோரின் கதையை, சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆர்.ஆர்.ஆர் என்ற பெயரில் இயக்கி வருகிறார்.

இதன் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் ஐதராபாத்தில் தொடங்கியது. ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, பிரியாமணி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இதில் ராம் சரண் ஜோடியாக ஆலியா பட் மற்றும் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக இங்கிலாந்தை சேர்ந்த டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் என்ற நடிகை நடித்து வந்துள்ளார். ஆனால் திடீரென படத்தில் இருந்து விலகுவதாக டெய்சி அறிவித்துள்ளார். இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

பரினீதி சோப்ரா அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்துவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சாய் பல்லவியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.