ராம்குமாரின் உடலில் மின்சாரம் பாய்ந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று மாநில மனித உரிமைகள் ஆணையம் முன் உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மறைந்த ஜெயலலிதா ஆட்சியின்போது கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் ஸ்வாதி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தப் படுகொலை குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஜூலை 1 ஆம் தேதி, திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் ராம்குமார் (22) என்ற இளைஞரைக் கைது செய்தனர். ராம்குமார் ஸ்வாதியை ஒரு தலையாக காதலித்ததாகவும், காதலை ஏற்காததால் வெட்டிக் கொன்றதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

கைது செய்யும்போது ராம்குமார் பிளேடால் தன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக காவல்துறை தரப்பால் கூறப்பட்டது. இதனால் அவரது கழுத்தில் கட்டு போடப்பட்டு, மீடியாக்களிடம் அவரால் பேச முடியவில்லை.

பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், அடுத்த சில வாரங்களில் (செப்டம்பர் 18 ஆம் தேதி) மின்சார ஒயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ஸ்வாதி கொலை வழக்கின் மர்மம் விலகாத நிலையில், ராம்குமாரின் தற்கொலை மேலும் சந்தேகங்களையும் சர்ச்சையையும் கிளப்பியது.

ராம்குமார் மரணத்தில் உள்ள மர்மம் வெளிவர நீதி விசாரணை நடத்தவேண்டும் என்று திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

இதனைத்தொடர்ந்து ராம்குமார் மரணம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்தபிறகு இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.

வழக்கு விசாரணை 5 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், ராம்குமார் மரணத்தில் என்ன நடந்தது என்பது பற்றி பல்வேறு புதிய தகவல்கள் வெளிவரத் தொடங்கி உள்ளன. அதன்படி, ராம்குமார் உடலை உடற்கூராய்வு செய்த 2 மருத்துவர்கள் மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

அதில், ராம்குமார் உடலில் மின்சாரம் பாய்ந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளனர். உடற்கூராய்வு மருத்துவர் அளித்துள்ள பதிலில், “நான் முன்பு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பேராசிரியராக பணியாற்றிய போது ராம்குமார் என்ற நபரின் மூளை மற்றும் இதர உறுப்புகள் திசு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. நானும் இன்னொரு மருத்துவரும் பரிசோதனை செய்தோம்.

மூளைத் திசு பரிசோதனை செய்ததில் நல்ல நிலையில் இருந்தது. இதய திசுக்களை பரிசோதனை செய்ததில் அதுவும் நல்ல நிலையில் இருந்தது. நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், மேலுதடு, கீழுதடு, சிறுநீரகம் போன்றவற்றின் திசுக்களை பரிசோதனை செய்து அறிக்கையில் அவை நல்ல நிலையில் இருந்ததாக சான்று வழங்கி இருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் உடலில் திசுக்களில் மாற்றம் இருக்குமா என்று அப்போது குறுக்கு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பொதுவாக இருக்கும் என்றும், ராம்குமார் உடலை நாங்கள் ஆராய்ந்ததில் மின்சாரம் தாக்கி இறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று மருத்துவர்கள் இருவர் ஒரே மாதிரியான வாக்குமூலத்தை மாநில மனித உரிமை ஆணையத்திடம் வழங்கி உள்ளார்கள்.

மேலும் சம்பவம் நடைபெற்ற தினத்தன்று மாலை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ராம்குமார் உடல் எடுத்து வரப்பட்டுள்ளது. அப்போது மருத்துவர் சையது அப்துல் காதர் என்பவர் அந்த உடலை பெற்றுள்ளார். அவர்தான் முதல் சாட்சியாக இந்த வழக்கில் இருக்கிறார்.

மருத்துவரின் வாக்குமூலம் படி, ராம்குமார் உடலை தான் பெற்றபோது அவரது உடலில் நாடித்துடிப்பு இல்லை மற்றும் ரத்த அழுத்தம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். குறுக்கு விசாரணையில், ராம்குமாருக்கு, மரண விறைப்பு ஏற்பட்டதற்கான அறிகுறி இருந்ததா என்ற கேள்விக்கு, அது சரிதான் என்று மருத்துவர் சொல்லியிருக்கிறார்.

மரணமடைந்த ஒருவரின் உடலில் மரண விறைப்பு ஏற்படுவதற்கு குறைந்தபட்சம் 12 மணி நேரம் ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே 12 மணி நேரத்திற்கு முன்பே, இந்த மரணம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்ற ஒரு சந்தேகம் இதன் மூலமாக உருவாகியுள்ளது. ராம்குமார் உடலில், மின்சார காயங்கள் எதுவும் இல்லை என்பதையும் அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

ராம்குமார் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாக காவல்துறையினர் கூறிய நிலையில், மருத்துவர்களின் இந்த வாக்குமூலத்தினால் ராம்குமார் மின்சாரம் தாக்கி உயிரிழக்கவில்லையெனில் அவரது மரணம் எவ்வாறு நிகழ்ந்தது எனவும், யாரைக் காப்பாற்ற ஜெயலலிதா ஆட்சியில் காவல்துறையினர் தவறான தகவலை அளித்தனர் என்பது குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

உயிர் பெறுகிறது ராம்குமார் மரண வழக்கு: விசாரணையை தொடங்கிய மனித உரிமைகள் ஆணையம்