கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை வாங்க வருவோரின் பெயர், முகவரி, கைப்பேசி எண், எந்த காரணத்திற்காக வாங்குகிறார் போன்றவற்றை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து காவல் ஆய்வாளர்களுக்கும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்விரோத கொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து மாநில அளவில் எடுக்கப்பட்ட ‘ஆப்பரேஷன் டிஸ்ஆர்ம்’ என்னும் தேடுதல் வேட்டையில் சுமார் 3,325 கொலைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, கொலைச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படும் 1,110 கத்திகள் மற்றும் 7 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் கத்தி, வீச்சரிவாள் போன்றவற்றை தயார் செய்யும் உரிமையாளர்கள் மற்றும் விற்பளையாளர்கள் அனைவரையும் காவல் நிலைய உட்கோட்ட அளவில் அழைத்து கூட்டங்கள் நடத்தப்பட்டது. மொத்தம் 579 கூட்டங்கள் நடத்தப்பட்டதில் 2,548 நபர்கள் கலந்துகொண்டு காவல்துறைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதன்தொடர்ச்சியாக கத்தி, வாள், வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பை கண்காணிக்கவும், இதுபோன்ற ஆயுதங்களை தவறானவர்கள் கைகளுக்கு செல்வதைக் கட்டுப்படுத்தவும் தமிழ்நாடு காவல் துறை தலைவர் சைலேந்திர பாபு, காவல் ஆணையாளர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் கீழ்காணும் நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.

அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பவர்கள், தயாரிக்கும் இடங்களை கண்டறிய வேண்டும்.

அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை வாங்க வருவோரின் பெயர், முகவரி, கைப்பேசி எண், எந்த காரணத்திற்காக வாங்குகிறார் போன்றவற்றை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

விவசாயம், வீட்டு உபயோகம் அல்லாமல் மற்ற காரணங்களுக்காக கத்தி போன்ற ஆயதங்களை அடையாளம் தெரியாதவர்களிடம் விற்பனை செய்யக்கூடாது.

கடை மற்றும் பட்டறைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தப்பட வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதில் சிரமம் ஏற்பட்டால் காவல்துறை உதவி செய்ய வேண்டும்.

குற்றவாளிகள் பற்றிய தகவல்களை காவல்துறைக்கு தெரிவிப்பவர்களுக்கு தக்க வெகுமதி வழங்க வேண்டும். இதன்படி ஒவ்வொரு காவல் நிலைய அதிகாரியும் மேற்கண்ட அறிவுரைகளை செயலாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் கத்தி மற்றும் அரிவாள் வாங்க ஆதார் எண் கட்டாயம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நெல்பேட்டை, ஒத்தக்கடை, வில்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கத்தி மற்றும் அரிவாள் கடைகள் உள்ளன.

கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் ஆதார் எண்ணைக் கண்டிப்பாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கடைகளில் கட்டாயம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் கடை உரிமையாளர்களை காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மனித கழிவுகளை அள்ளும் தூய்மைப் பணியாளர்களின் மரணம்; அரசே பொறுப்பு