காவிரி ஆற்றில் ஏற்பட்ட அதிகப்படியான வெள்ளப் பெருக்கு காரணமாக திருச்சி மாவட்டம் முக்கொம்பு கதவணை கடந்த ஆகஸ்டு மாதம் உடைந்தது.
 
இதையடுத்து ஒரு சில நாட்களில் அணையை பார்வையிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு புதிய கதவணை கட்டுவதற்கு உத்தரவிட்டார்.
 
இதற்கிடையே கடந்த 3.9.2018 அன்று முக்கொம்பு அணையை பார்வையிட்ட தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக அரசு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தான் அணை உடைந்தது என்று குற்றம்சாட்டினார்.
 
இந்த விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மீது திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சம்பத்குமார் கடந்த 2.10.2018-ல் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கு மீதான மனு கடந்த 11-ந்தேதி மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு முன்பு விசாரணைக்கு வந்தது.  இதையடுத்து இந்த வழக்கில் வருகிற பிப்ரவரி 13-ந்தேதி ஆஜராகுமாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நீதிபதி குமரகுரு உத்தரவிட்டார்.
 
இதே போல முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.
 
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் கடந்த 26.8.2018 அன்று பேட்டியளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழக அமைச்சர்கள், முதல்வர் ஆகியோர் கமி‌ஷனுக்கு ஆசைப்பட்டு முக்கொம்பு அணையை உடைத்தார்களோ? என்ற சந்தேகம் உள்ளது என்று கூறியிருந்தார்.
 
அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து கூறிய இளங்கோவன் மீது தமிழக அரசு சார்பில் திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் இளங்கோவன் வருகிற பிப்ரவரி 12-ந்தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.