அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்யும் போது மருத்துவ அலட்சியத்தால் பிறந்த சிறுமிக்கு பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்க வேண்டும். அச்சிறுமி 21 வயது வரை எட்டும்வரை, மாதம் ரூ10,000 வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரியை சேர்ந்த விக்னேஷ்குமார்- தனம் தம்பதிக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது குழந்தை பெற்ற பின், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில், 2014ல் தனம் கருத்தடை சிகிச்சை மேற்கொண்டார்.

பின்னர், மற்றொரு மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றபோது, மீண்டும் கருவுற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, 2017 செப்டம்பரில், மூன்றாவதாக பெண் குழந்தை பெற்றெடுத்தார்.

குழந்தைகளின் கல்வி, பராமரிப்பு, திருமணத்துக்கான செலவுகளை, தன்னால் செய்ய முடியாது என்பதாலும், டாக்டரின் அலட்சியத்தால் நடந்ததால், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, உயர் நீதிமன்றத்தில் தனம் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மூன்றாவது பிறந்த பெண் குழந்தைக்கு பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்க வேண்டும். எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது.

அனைத்து விதமான பள்ளிக் கட்டணமும் மாநில அரசால் பெற்றோருக்கு திருப்பி அளிக்க வேண்டும். புத்தகங்கள், எழுதுபொருட்கள், சீருடைகள் மற்றும் இதர கல்விச் செலவுகளுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கே வேண்டும்.

அச்சிறுமி 21 வயது எட்டும்வரை, உணவு மற்றும் முறையான வளர்ப்புக்கு அரசு சார்பில் குடும்பத்தினருக்கு மாதம் ரூ10,000 செலுத்த வேண்டும். இது தவிர, தாயாருக்கு இழப்பீடாக 3 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள்காட்டி, மருத்துவர்களின் அலட்சியப் போக்கை சுட்டி காட்டிய நீதிமன்றம், இதற்கு மாநில அரசு தான் பொறுப்பு என்றார்.

ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருப்பதால், மூன்றாவது குழந்தை பிறந்தால் வளர்க்கும் பொருளாதார வசதி இல்லாததன் காரணமாக வேண்டாம் என நினைத்துள்ளனர். ஆனால், மருத்துவர்கள் மேற்கொண்ட கருத்தடை அறுவை சிகிச்சையின் தோல்வியால் 3ஆவது குழந்தை பிறந்துள்ளது. எனவே, அந்த குழந்தையின் வளர்ப்பதற்கான செலவினங்களை ஏற்பது அரசின் கடமையாகும் எனக் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.