மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50% இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்தள்ளது.

தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15% இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50% இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது.

மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பினர் அடங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கக் கோரி, திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, வழக்கின் தீர்ப்பை ஜூலை 27-ம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் எழுத்துப்பூர்வமான பதில் இன்று (ஜூலை 21) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு தர உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகள் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே பொருந்தும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. எனவே உச்சநீதிமன்ற ஒப்புதல் இல்லாமல் மாணவர் சேர்க்கை நடைமுறையில் மாற்றம் செய்யமுடியாது என்று தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க: ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில், 27% வழங்க மத்திய அரசு ஒப்புதல்