சமூக வலைதளத்தில் சாதியை குறிப்பிட்டு மோசமாக பதிவிட்ட நபருக்கு நடிகை ரித்விகா பதிலடி கொடுத்துள்ளார்.

மக்களிடையே நிலவும் சாதிய பாகுபாடுகளை ஒழிப்பதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஆணவக்கொலைகள், ஏற்றத்தாழ்வு போன்றவற்றை சீர்செய்வது பெரும் சவாலாகவே உள்ளது.

இந்நிலையில், கந்த சஷ்டி கவசம் சர்ச்சை, பெரியார் சிலை மீது காவி சாயம் பூசியது போன்ற செயல்கள் சமுதாயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு இல்லையென மத்திய அரசு அறிவித்திருந்தது என பல்வேறு சமூக பாகுபாடுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

சமீப காலமாக சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுவெளியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான செயல்கள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் அதிகரித்துக்கொண்டே வருவது மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மெட்ராஸ், பரதேசி, கபாலி, ஒருநாள் கூத்து, டார்ச்லைட் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை ரித்விகாவை சமூக வலைதளத்தில் ஒரு நபர் சாதியை குறிப்பிட்டு கீழ்த்தரமாக பதிவிட்டிருந்தார். இதற்கு நடிகை ரித்விகா பதிலடி கொடுத்தற்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக நடிகை ரித்விகா வெளியிட்ட ட்விட்டர் அறிக்கையில், “தலித்தாக இருப்பின் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பேன். என்ன செய்ய? அப்பாக்கியம் நானடையேன். நானும் அடக்குமுறைகள் செய்த குற்றமிகு ஆதிக்க சாதிகளுள் பிறந்தவள் தான். வருந்துகிறேன். இனியாவது சாதிகளற்ற சமூகமாக, மனிதர்களாக வாழ முயற்சிப்போம். நிற்க.

ஒருவகையில் நானும் தலித் தான். ஒடுக்கப்பட்டோர் அனைவரும் தலித் எனின் பெண்ணாகிய நானும் தலித் தானே. காலங்காலமாக ஆண்களால் ஒடுக்கப்பட்டோர் தானே. ஆம் தலித். எம்மை தலித்தாக்கிய பிழையும் பாவமும் தங்கள் ஆணினத்தையே சாரும். மற்றபடி எம் அழகைப் பாராட்டியதற்கு நன்றி.

பி.கு – தலித் பெண்கள் என்னை விட அழகு” என்று ரித்விகா குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுக்கு பலர் பாராட்டினாலும், சிலர் காழ்ப்புணர்ச்சியோடும் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் வாசிக்க: அமிதாப், அபிஷேக் பச்சனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா மருத்துவமனையில் அனுமதி; ரசிகர்கள் பிரார்தனை