எனக்கு எதிராக சனாதன கும்பல் தவறான பிரச்சாரம் செய்து வருகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

பெண்களை இழிவு படுத்தும் மனுதர்ம நூலை தடைசெய்ய வேண்டும் என போராட்டம் நடத்திய தொல்.திருமாவளவன் கூறுகையில், “இது மகளிர் குலத்தின் மீதான இழிவை துடைக்கும் போராட்டம். பெண்களை இழிவு படுத்தும் மனுதர்ம நூலை தடை செய்ய வேண்டும். அரசியல் ஆதாயத்துக்காக தன் மீது அபாண்டமாக பழி சுமத்துகின்றனர்.

திமுக கூட்டணியை சிதறடிக்கவே என் மீது திட்டமிட்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் பற்றிய இணையதளவழி கருத்தரங்கில் நான் பேசியதை துண்டித்து துண்டித்து வெளியிட்டு இருக்கிறார்கள். எனது 40 நிமிட உரையை முழுமையாக பெண்கள் கேட்க வேண்டும்.

பெண்களை இழிவுபடுத்தினோம் என்று அரசியல் ஆதாயத்திற்காக பழி சுமத்துகிறார்கள். திமுக கூட்டணியை சிதறடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்று அவதூறு பரப்புகிறார்கள்”’ என தன் மீது குற்றம் சாட்டும் பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக மனுஸ்மிருதி இந்து பெண்கள் அனைவரையுமே விபச்சாரிகள் என்று குறிப்பிடுகிறது என்று யூடியூப் சேனல் ஒன்றுக்கு திருமாவளவன் பேட்டி அளித்திருந்தார். பெண்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் திருமாவளவன் அவதூறாகவும், சர்ச்சையான கருத்துகளைக் குறிப்பிட்டதாகவும் பேசியதாகவும் புகார் எழுந்தது.

இப்பேட்டி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சார்பில் பல்வேறு பகுதிகளில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமாவளவன் மீது மதங்களை மையப்படுத்தி குற்றத்தில் ஈடுபடுதல், கலகம் செய்ய தூண்டுதல், சாதி, மதம், இன மொழி தொடர்பாக விரோத உணர்ச்சிகளை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமாவளவனின் கருத்துக்கு மன்னிப்புக் கேட்க சொல்லும் பாஜக குஷ்பு