புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ சொல்றியா மாமா’ பாடலை தடை செய்யாவிட்டால் சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புஷ்பா’. இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படம் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடித்துள்ள இப்படத்தில், பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல் பாகம் வரும் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது. புஷ்பா படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இப்பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியானது. தெலுங்கில் “ஓ அண்டாவா மாவா.. ஓஓ அண்டாவா மாவா” என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன.

தமிழிலும் இந்த பாடல் “ஓ சொல்றியா மாமா.. ஓஓ சொல்றியா மாமா” என்கிற வரிகளைக் கொண்டு வெளியாகியுள்ளது. தமிழில் இந்த பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார். விவேகா இந்த பாடலை எழுதியுள்ளார். இந்தப் பாடலில், ஒரு பெண் எவ்விதம் ஆடை அணிந்திருப்பினும், என்ன நிறம், உயரம், தோற்றமாக இருப்பினும் ஆண்களின் புத்தி அலையிற புத்தி என்ற வரிகள் உள்ளன.

இதனால் இந்தப் பாடலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அனைத்து ஆண்களையும் இந்த வரிகளின் கருத்துக்கள் தவறாக சித்தரிப்பதாகவும், இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு ஆண்கள் சங்கத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ சொல்றியா மாமா’ பாடலை தடை செய்ய வேண்டும், இல்லையெனில் சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.