பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவின் இரண்டு ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட பின்னர், தலைமறைவான சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி காவல்துறையினர் ஜூன் 16 ஆம் தேதி டெல்லியில் கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

ஏற்கெனவே அவரது இரண்டு ஜாமீன் மனுக்கள் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆகியவற்றில் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனையடுத்து, இரு வழக்குகளில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் சிவசங்கர் பாபா.

இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, புகார் அளித்த பெண்ணிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தை சீலிடப்பட்ட கவரில் காவல்துறையினர் தாக்கல் செய்தனர். பின்னர், சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 2015, 2018, 2020 ஆம் ஆண்டுகளில் பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் கொடுத்த புகார்களில்,

இந்த ஆண்டு ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் போக்சோ சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 3 முறை கைது செய்யப்பட்டுள்ளதாகக் க் குறிப்பிட்டார்.

10 ஆண்டுகளுக்குக் குறைவான தண்டனைக்குரிய சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது, 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்பதாலேயே, வெவ்வேறு மாதங்களில் 3 முறை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் சிவசங்கர் பாபா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கைதுக்குப் பிறகு சிவசங்கர் பாபாவுக்கு இருமுறை நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுத் திரும்பியதாக, அவர் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். அதேபோல, வெறும் புகாரின் அடிப்படையில், எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் எனவும் வாதிட்டார்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த மனுக்களில் இன்று (ஆகஸ்ட் 17) தீர்ப்பளித்த நீதிபதி தண்டபாணி, பாலியல் தொல்லை குற்றச்சாட்டில் கைதாகியுள்ள சிவசங்கர் பாபாவின் இரு ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சிவசங்கர் பாபுவுக்கு ஜாமீன் வழங்கினால் புகார்தாரர்களுக்கும், விசாரணைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என தனது உத்தரவில் குறிப்பிட்ட நீதிபதி, தங்களின் உணர்வுகளுக்கு துரோகம் செய்யும் போலி சாமியார்களிடம் இருந்து மக்கள், தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மக்களின் மனதிற்குள் இருக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக கூறும் போலி சாமியார்களும், மத குருமார்களும் சமுதாயத்தில் காளான்களை போல் பெருகியுள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். அனைத்து தரப்பு வயதினரும் சாமியார்கள் மீதான குருட்டு நம்பிக்கையால் பாதிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தார்.

பட்டியலின மக்கள் குறித்து அவதூறு பேச்சு: கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார் மீரா மிதுன்