பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 4வது நாளாக அதிகரித்து, மீண்டும் உச்சத்தை நோக்கி செல்கிறது. இது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதத்திற்கு முன் வரை தொடர்ந்து 6 மாதமாக விலை ஏற்றப்பட்டதால், பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்தது.

இதனிடையே தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் மார்ச், ஏப்ரல் மாதத்தில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் மே 02 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயரத்தத் தொடங்கியுள்ளன.

கடந்த மே 4 ஆம் தேதி முதல் இன்று (மே 07) வரை தொடர்ந்து 4 நாட்கள் தினம் 20 காசு, 30 காசு என்று விலை அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 4வது நாளாக இன்று பெட்ரோல் 25 காசும், டீசல் 30 காசும் அதிகரித்துள்ளது. இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹93.15க்கும், டீசல் ₹86.65க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையை பழையபடி மீண்டும் மத்திய அரசு உயர்த்தி வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று, ஊரடங்கு கட்டுப்பாடு என பல்வேறு பிரச்னைகளால் வேலையிழந்து பொருளாதாரத்தில் மிகவும் சிரமப்பட்டு வரும் மக்களுக்கு, இவ்விலையேற்றம் மேலும் பாதிப்பை தந்துள்ளது.

இதனால், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல், அதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும், பொது மக்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.