ஷியா முஸ்லீம் வக்ஃபு வாரிய முன்னாள் தலைவர் வாசிம் ரிஸ்வி, காசியாபாத்தின் தாஸ்னா கோயில் மடத்தில் இந்து மதத்திற்கு மாறி தனது பெயரை ஜிதேந்தர் நாராயண்சிங் தியாகி என மாற்றி கொண்டது உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும்பான்மையான இஸ்லாமிய சமூகத்தின் ஷியா பிரிவின் முக்கிய தலைவராக பார்க்கப்பட்டவர் வாசிம் ரிஸ்வி. இதன் காரணமாக அவருக்கு உ.பி.யின் ஷியா முஸ்லிம் வஃக்பு வாரியத்தின் தலைவர் பதவியும் கிடைத்திருந்தது.

ஆனால் வாசிம் ரிஸ்வி, இந்துத்துவா அமைப்புகளுக்கு ஆதரவாகப் பேசி வந்தார். இந்து அமைப்புகள் மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துக்களை கூறி வந்தார். அயோத்தி பிரச்சனையில் ராமர் கோயில் அங்கு கட்டப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்துக்களுக்கு ஆதரவாகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வந்ததால், சன்னி பிரிவு முஸ்லிம்கள் ரிஜ்வியை முஸ்லிம் அல்லாதவர் எனப் ‘பத்வா’ அளித்திருந்தனர். தாம் சார்ந்த ஷியா பிரிவு முஸ்லிம்களாலும் ரிஜ்வீயை வெறுக்கும் நிலை துவங்கியது.

இந்நிலையில், வாசிம் ரிஸ்வி இன்று (6.12.2021) காலை உத்திரப்பிரதேசத்தில் உள்ள காசியாபாத் மடத்தில் இந்துவாக மதம் மாறினார். மகாகால் தாஸ்னா கோயில் மடமான அதன் அதிபர் நரசிம்மானந்கிரி மஹராஜ் எனும் சாது மதமாறும் சடங்குகளை செய்து வைத்தார்.

அதிகாலை முதல் நடந்த இந்த மதமாற்ற சடங்கில் பல சாதுக்களும் கடந்து கொண்டனர். இச்சடங்கில் அவருக்கு பூணூலும் அணிவிக்கப்பட்டது. மேலும், ஜிதேந்தர் நாராயண்சிங் தியாகி எனப் பெயரும் மாற்றம் செய்து கொண்டார்.

இதனைத்தொடந்து, காவி உடைகள் அணிந்தபடி தாஸ்னா கோவிலில் யாகம் வளர்த்து சிறப்பு பூஜையும் செய்தார். இவரை போல் இதுவரை முக்கிய முஸ்லிம்கள் எவரும் மாறியதில்லை என்பதால் இச்சம்பவம் உத்திரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சில தினங்களுக்கு முன் ரிஜ்வீ தாம் இறந்தால் உடலை முஸ்லிம் சடங்கில் புதைக்கக் கூடாது எனவும், மாறாக இந்துக்களை போல் எரியூட்டப்பட வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்திருந்தார்.

தனது மதமாற்றத்திற்கு பின் ஜிதேந்தர் நாராயண்சிங் தியாகி கூறுகையில், “முஸ்லிம்களால் தூக்கி எறியப்பட்ட எனது தலைக்கு ஒவ்வொரு வெள்ளிகிழமைகளிலும் ஒரு தொகை இனாமாக அறிவிக்கப்பட்டது. இதனால் நான் இந்து மதத்திற்கு மாற முடிவு செய்தேன்.

இனி நான் எனது இந்து மதத்தை நாட்டில் வளர்க்கப் பாடுபடுவேன். இந்துக்களுக்கு எதிராக வாக்களிக்கும் முஸ்லிம்கள் அரசியலில் தோற்க வைப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுபோன்று தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தும் வாசிம் ரிஸ்வி, சில மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் திருக்குர்ஆனின் 26 பக்கங்களை நீக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள் அமர்வு, ரிஜ்வீக்கு ரூ.50,000 அபராதமும் விதித்தது.

இதனையடுத்து புதிய சர்ச்சையாக வாசிம் ரிஸ்வி, ‘முகம்மது’ எனும் பெயரில் ஒரு நூலை வெளியிட்டார். அதில் முகமது நபியை மோசமாகச் சித்திரித்திருந்ததாக சர்ச்சை ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.