பட்டியலின சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஆண் நண்பரும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

நடிகையும், மாடல் அழகியுமான நடிகை மீரா மிதுன் டுவிட்டர் பக்கத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், சினிமாவில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்கள் பற்றியும் இழிவான கருத்துகள் பதிவிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலர் வன்னியரசு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 7 ஆம் தேதி புகார் அளித்தார்.

இதனையடுத்து, இந்திய தண்டனை சட்டம் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சைபர் க்ரைம் காவல்துறையினர் மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.

மேலும், காவல்துறைக்கு சவால் விடும் வகையில், மற்றொரு வீடியோவையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதையடுத்து, அவரைக் கைது செய்ய, சென்னை மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையர் கருணாகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

[su_image_carousel source=”media: 25696,25697″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள விடுதியில் தங்கியிருந்த மீரா மிதுன் என்ற தமிழ்ச் செல்வியை கடந்த 14 ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் மீரா மிதுன் சென்னைக்கு அழைத்துவரப்பட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் காவல்துறையினரின் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, மீரா மிதுனை சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தினர். வரும் 27 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதனையடுத்து, மீரா மிதுன் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில், மீரா மிதுனின் நண்பரான அம்பத்தூரைச் சேர்ந்த சாம் அபிஷேக்கையும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மீரா மிதுனின் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட உடந்தையாக இருந்ததாகக் கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!