நீதிமன்ற தடை உத்தரவை மீறி மெட்ராஸ் கேனைன் கிளப்பை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்த பத்திரப்பதிவு துறை செயலாளர் பீலா ராஜேஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள நாய்கள் பராமரிப்பு கிளப் (மெட்ராஸ் கேனைன் கிளப்) நிர்வாக நடவடிக்கைகளில் நிதி முறைகேடுகள் நடந்ததாக கூறி, சிறப்பு அதிகாரிகளை நியமிக்க பத்திரப்பதிவுத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதை எதிர்த்து அந்த கிளப் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அந்த கிளப்பிற்கு 3 சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து பத்திரப்பதிவு துறை உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மெட்ராஸ் கேனைன் கிளப் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், “பத்திரப்பதிவு துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் சென்னை மத்திய பத்திரப் பதிவுத்துறை பதிவாளர் கேகே மஞ்சுளாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இரு அதிகாரிகள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா? நீதிமன்ற உத்தரவை மதிக்க மாட்டீர்களா என்றும், நீதிமன்ற உத்தரவை மீற முடியும் என நினைத்து கொண்டிருக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் இது முழுக்க முழுக்க நீதிமன்ற அவமதிப்பு செயல் என்றும் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், அதிகாரிகளை நியமத்து பத்திரப்பதிவு துறை பிறப்பித்த உத்தரவு திரும்ப பெறப்படும் அல்லது நிறுத்தி வைக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி முடித்து வைத்து உத்தரவிட்டார்.

தனியார்மயமான ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரயில்… வலுக்கும் எதிர்ப்புகள்