நான் அரசியலுக்கு வரவேண்டுமென்று கூறி என்னை யாரும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்; நான் ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று நடிகர் ரஜினி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி, ரஜினியின் ரசிகர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினர். வழக்கம்போல், இந்த போராட்டம் குறித்தும், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து மீண்டும் மறுபரிசீலனை செய்வார் என்றும் ஊடகங்களால் பரபரப்பான செய்தியாக்கப்பட்டது.

இந்நிலையில், போராட்டம் நடத்தி முடிந்து ஒருநாள் கழித்து ரஜினி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு.. நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி, பொறுப்பிலிருந்தும், மன்றத்திலிருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து, சென்னையில் ஓர் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள்.

கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனையளிக்கிறது.

தலைமையின் வேண்டுகோளை ஏற்று, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத மக்கள் மன்றத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவை கூறிவிட்டேன்.

தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தி, என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை- நடிகர் ரஜினி அதிரடி