மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் 17 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாக சொந்த ஊருக்கு சென்ற நிலையில், இன்று காலை நிகழ்ந்த ரயில் விபத்தில் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக உணவுக்கும், வேலைக்கும் வழியில்லாத வெளிமாநிலங்களைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் இந்தியாவின் தெற்கில் இருந்து வடக்கு நோக்கியும், வடக்கில் இருந்து தெற்கு நோக்கியும் தினசரி பல்லாயிரம் பாதங்கள் சாலைகளின் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் கடந்து செல்கின்றன.

மேலும் வாசிக்க: கங்கை நீர் கொரோனா வைரஸை கொல்கிறதா.?

இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 17 தொழிலாளர்கள், ஜல்னாவில் இருந்து புவாசல் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்கள் சாலைகளில் நடந்தால் காவல் துறை பிடித்து விடும் என்று அஞ்சி, அவர்கள் ரயில்பாதை அருகே நடந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

36 கிலோ மீட்டர் நடந்த நிலையில் புலம் பெயர் தொழிலாளர்கள் 17 பேரும் ஓய்வு எடுக்க முடிவு செய்து, மும்பையிலிருந்து 360 கி.மீ தொலைவில் உள்ள அவுரங்காபாத் அருகில் கர்மத் என்கிற இடத்தில் ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கினர் என்றும், அச்சமயத்தில் அந்த வழியாக வந்த சரக்கு ரயில் அவர்கள் மீது ஏறியது என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

[su_slider source=”media: 13510,13511″ limit=”100″ width=”660″ height=”360″ speed=”0″]

இந்த கோர விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட சுட்ட சப்பாத்தியின் புகைப்படம், இவர்களின் வாழ்க்கை முறையை, வறுமையை உணர்த்தும் வகையில் நெஞ்சை உருக்கும் நிகழ்வாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுபற்றி தகவலறிந்த ரயில்வே காவல்துறை மற்றும் உள்ளூர் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.