தமிழகம் முழுவதும் கோவில்களில் திருடப்பட்ட சிலைகளை, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை மூலம் மீட்டு வருகின்றனர். வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட சிலைகளும் மீட்கப்பட்டு வருகின்றன.இதையொட்டி சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் வசிக்கும் தொழில் அதிபர் ரன்வீர்ஷா என்பவரது வீட்டில், கடந்த வாரம் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின்போது மிகவும் பழமை வாய்ந்த கற் சிலைகள், கலைநயமிக்க கல்தூண்கள், சாமி சிலைகள் உள்ளிட்ட 91 கலைப்பொருட்கள் மீட்கப்பட்டன.மீட்கப்பட்ட இவற்றை சென்னை கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து தொழில் அதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான வீடுகள் எங்கெங்கு உள்ளதோ, அங்கெல்லாம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. திருவாரூர் மற்றும் திருவையாறில் உள்ள ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பழைய அரண்மனைகளில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

காஞ்சீபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அருகேயுள்ள மோகல்வாடி மற்றும் படப்பை அருகேயுள்ள கூழாங்கல்சேரியில் உள்ள ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் நேற்று ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பழனிசெல்வம், அழகுசுந்தரம், இன்ஸ்பெக்டர்கள் ராதாகிருஷ்ணன், விநாயகமூர்த்தி, அச்சரப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சுரேந்தர்குமார், மேல்மருவத்தூர் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் உள்ளடங்கிய தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

முதலில் மோகல்வாடி கிராமத்தில் எழில் சூழ்ந்த பகுதியில் காணப்பட்ட ரன்வீர்ஷாவின் பண்ணை வீட்டுக்குள் போலீசார் நுழைந்தனர். அங்குள்ள அறைகளில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, லிங்கம், நரசிம்மர், முருகன், நந்தி, தட்சிணாமூர்த்தி, சிவன் உள்ளிட்ட சிலைகள் கைப்பற்றப்பட்டன. இங்கு மொத்தம் 100 சிலைகள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட சிலைகள் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சிலைகள் ஆகும்.

இந்த சிலைகள் கோவில் ஒன்றில் திருடப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து படப்பை அருகேயுள்ள கூழாங்கல்சேரியில் உள்ள ரன்வீர்ஷாவின் பண்ணை வீட்டுக்கு போலீசார் சென்றனர். அங்கு நடத்திய சோதனையில் 32 சிலைகள் மீட்கப்பட்டன. நேற்றைய சோதனை வேட்டையில் 132 சிலைகள் மீட்கப்பட்டதாகவும், இந்த சிலைகள் அனைத்தும் சென்னை கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு பத்திரமாக எடுத்து செல்லப்படும் என்றும், இந்த சிலைகளின் மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

சோதனை முடிவில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய விவரம் பின்வருமாறு :

“மிகவும் பழமையான சிலைகளை உரிய அனுமதி இல்லாமல் வீடுகளில் பதுக்கி வைப்பது சட்டப்படி குற்றமாகும். வீடுகளில் பழமையான சிலைகளை வைத்திருப்பவர்கள் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு உரிய தகவல் தெரிவிக்கவேண்டும். அடுத்த 15 நாட்களுக்குள் வீடுகளில் வைத்திருக்கும் சிலைகளை ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைப்பவர் கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது. போலீசாரால் வீடுகளில் சிலைகளை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நிச்சயமாக தண்டனை கிடைக்கும். சிலைகளை வீடுகளில் வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து தகவல் கொடுத்தால் பாராட்டு கிடைக்கும்.தற்போது தொழில் அதிபர் ரன்வீர்ஷாவின் வீடுகளில் சோதனை நடத்தி சிலைகள் உள்பட கலைநயமிக்க பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளன. அவருக்கு ‘சம்மன்’ அனுப்பி அவரிடம் விசாரணை நடத்த உள்ளோம்.

அறநிலையத்துறை அதிகாரிகள் தவறு செய்யாமல் இருந்தால் பயப்பட தேவையில்லை. போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது தான் தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதிகாரிகளை நாங்கள் கைது செய்திருக்க முடியும். ஆனால் நாங்கள் அதை செய்யவில்லை. ஒரு அதிகாரிக்கு ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மறுக்கப்பட்டு உள்ளது. சட்டப்படி தான் இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது ” என அவர் கூறினார்.