கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே துணை காவல் கண்காணிப்பாளரின் தொடர் மிரட்டலால் மருத்துவர் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சிவராம பெருமாள். அப்பகுதியில், மருத்துவமனை அமைத்து பணியாற்றி வருகிரார். இவர் திமுக மருத்துவர் அணி மாவட்ட துணை அமைப்பாளராகவும் உள்ளார். இவரது மனைவி சீதா அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 12ம் தேதி கொரோனா பணி முடிந்து வீடு திரும்பிய மனைவி டாக்டர் சீதாவை தனது காரில் வீட்டிற்கு அழைத்து வரும்போது, வழியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கன்னியாகுமரி காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன், சிவராம பெருமாளின் வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.

காரில் இருந்து இறங்கி சென்ற டாக்டர் சிவராமப் பெருமாள், அரசு மருத்துவமனையில் கோவிட்-19 பணி முடிந்து டாக்டரான தனது மனைவியை அழைத்து வருவதாக ஆங்கிலத்தில் பதில் கூறி உள்ளார். ஆங்கிலத்தில் தான் பேசுவாயா.. தமிழில் பேச மாட்டாயா.. என ஒருமையில் பேசி அவமானப்படுத்தி உள்ளார்.

அப்போது டிஎஸ்பி பாஸ்கரன், டாக்டர் சிவராம பெருமாளையும் அவரது மனைவியையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. பொது இடத்தில் பலர் முன்னிலையில் தன்னையும் மனைவியையும் அவமானமாக பேசியதால் சிவராமபெருமாள் துயரத்தோடு வீட்டிற்கு சென்றுள்ளார்.

அன்றிலிருந்து அவ்வப்போது பாஸ்கரன், சிவராமன் பெருமாளை தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனசோர்வுடன் இருந்துவந்த சிவராம பெருமாள், “தன்னை மிரட்டிய துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தான் தனது மரணத்துக்கு காரணம்” என கடிதம் மற்றும் ஆடியோ வைத்துவிட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

சாத்தான்குளத்தில் தந்தையும் மகனையும் காவல்துறை அதிகாாிகள் அடித்து கொடுமைபடுத்தி கொலை செய்த சம்பவத்தின் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. அதற்குள் கன்னியாகுமாியில் மருத்துவா் ஒருவா் டிஎஸ்பியின் மிரட்டலால் தற்கொலை செய்து கொள்கிறேன் என ஆடியோவும் வெளியிட்டு கடிதமும் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு; சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்