டிஜிட்டல் மீடியா நிறுவனங்களில், வெளிநாட்டு முதலீடுகள் 26% என்ற வரம்பில் ஓராண்டு கால அவகாசத்திற்குள் குறைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் செய்தி மற்றும் நடப்பு விவகாரம் குறித்த செய்திகளை வெளியிடும் டிஜிட்டல் மீடியாக்களில் அந்நிய முதலீடு 26% என்ற வரம்பு வரையறுக்கப்பட்டது.

சுமார் ஓராண்டுக்குப் பின் தற்போது மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. இதற்கான உத்தரவில் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சக செயலர் அமரேந்திர சிங் கையெழுத்திட்டுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய தகவல் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகம், டிஜிட்டல் மீடியா நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “26% குறைவாக அந்நிய முதலீடு உள்ள ஊடகங்கள் அதுபற்றிய விவரங்களையும், எந்த அளவுக்கு பங்குகள் உள்ளன என்ற விவரமான அறிக்கையையும் ஒரு மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

அந்நிய முதலீட்டை எதிர்நோக்கும் நிறுவனங்கள் குறித்து முன்னதாகவே அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும். அதேபோல 60 நாட்களுக்கு மேலாக பணியில் ஈடுபடுத்தப்படும் வெளிநாட்டவர் குறித்த விவரத்தையும் அவரது நியமனத்தின் போது தெரிவிக்க வேண்டும்.

அத்துடன் இயக்குநர்கள், நிறுவன மேம்பாட்டாளர்கள், பங்குதாரர்கள் குறித்த விவரத்தையும் அளிக்க வேண்டும். வெளிநாட்டவரை நியமிப்பதாக இருந்தால் அதற்குரிய அனுமதி பெற்ற பிறகே அவர் நியமிக்கப்பட வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒளிப்பரப்புத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது OTT தளங்கள்